திருவண்ணாமலை அக்.7-
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் பொதுமக்களிடமிருந்து 645 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 22, 470 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக முதல் தளத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் திங்கட்கிழமை தோறும் நடைபெற்று வந்த மக்கள்; குறைதீர்வு நாள் கூட்டமானது கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக கடந்த ஆண்டு முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா வைரஸ் நோய் தொற்று தமிழகத்தில் குறைந்து வரும் நிலையில், மக்கள் குறைத் தீர்வு நாள் கூட்டம் நடத்த அரசு அனுமதி வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பொது மக்களிடமிருந்தும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளிடமிருந்தும் பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் நேரில் பெற்றுக் கொண்டார்.
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, வங்கிக்கடனுதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 645 மனுக்கள் பெறப்பட்டது.
பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் வழங்கி, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்திரவிட்டார். மேலும், நிலுவையிலுள்ள மனுக்களின் தொடர் நடவடிக்கைகள் குறித்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து பல்வேறு குறைகளை விண்ணப்பங்களாக பெற்றுக்கொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதை தொடர்ந்து உடனடியாக 1 மாற்றுத்திறனாளி நபருக்கு ரூ.6400 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிளும், 1 மாற்றுத்திறனாளி நபருக்கு ரூ.4910 மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலியும், 2 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு ரூ.2100 மதிப்பிலான வாக்கரும் 1 மாற்றுத்திறனாளி நபருக்கு ரூ.540 மதிப்பிலான அக்குள் கட்டையும், 3 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு ரூ.2220 மதிப்பிலான காதொலி கருவியும், 1 மாற்றுத்திறனாளி நபருக்கு ரூ.6300 மதிப்பிலான தையல் இயந்திரமும் ஆகமொத்தம் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.22,470 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துக்குமரசாமி, கூடுதல் ஆட்சியர், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மு.பிரதாப் உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) கிருஷ்ணமூர்த்தி, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு வெங்கடேசன் வருவாய் கோட்டாட்சியர் (திருவண்ணாமலை) வெற்றிவேல், வருவாய் கோட்டாட்சியர் (ஆரணி) க.கவிதா, வருவாய் கோட்டாட்சியர் (செய்யாறு) விமல்ராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் கு.ஜோதிலிங்கம் மற்றும் பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.