திருவண்ணாமலை அக்.3-
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த, தென்கரும்பலூர் கிராமத்தில் உத்தமர் காந்தியடிகள் 153-வது பிறந்த நாளை முன்னிட்டு கிராம சபா கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள்; கலந்துக்கொண்டு ரூ.22.44 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த தென்கரும்பலூர் கிராமத்தில் உத்தமர் காந்தியடிகள் 153-வது பிறந்த நாளை முன்னிட்டு கிராம சபா கூட்டம் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் தலைமையில் நேற்று (02.10.2021) நடைபெற்றது. இதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்கள் பயனாளிகளுக்கு ரூ. 22.44 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் அவர்கள் பேசியதாவது, தமிழ்நாட்டில் முதன் முதலில் கிராம சபை கூட்டங்கள் 1998-ல் நடைபெற்றது. இதற்கு வித்திட்டது முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் தான். 1998-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த போது அந்தந்த கிராமங்களை ஒருங்கிணைத்து மக்களின் மனநிலையை அறிந்து, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த கிராம சபை கூட்டம். இதற்கு முன்னாடி குடியரசு தினம், சுதந்திர தினம், அண்ணல் காந்தியடிகள் பிறந்த தினத்தன்று தான் கிராம சபை கூட்டம் நடைபெறும். இப்பொழுது கிராம சபை கூட்டம் என்பது மக்களை கூட்டி மூன்று மாதத்திற்கு ஒரு முறை மக்களின் பிரச்சனைகள் என்னவென்று கேட்டறிந்து மக்களை கூட்டி, பேசி அவர்களின் உணர்வுகளை புரிந்து ஊராட்சியை நடத்துவது தான் ஊராட்சி மன்றத்தின் வேலை. அதற்காக தான் இந்த திட்டத்தை இந்தியாவிலேயே முதன் முறையாக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் மிக சிறப்பாக நடத்தினார்கள். உத்தமர் காந்தியடிகள் பிறந்த நாள் அன்று ஏன் முதன் முதலில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது என்றால், மாகத்மா காந்தியடிகள் தான் நமக்கு சுதந்திரம் பெற்று தந்தார். கிட்டதட்ட 250 ஆண்டுகள் பிரிட்டிஷ்காரர்களின் அடிமைப்பட்டு இருந்தோம். உத்தமர் காந்தியடிகள் அவர்கள் தான் நம் நாட்டிற்கு சுதந்திரம் வேண்டும் என்று சொல்லி உண்ணாவிரதம், நடைபயணம், நிறைவாசல்கள் என்று பல்வேறு இன்னல்கள் பெற்று நம் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி தந்தார்கள். இவர் தான் முதன் முதலில் “கிராம இராஜ்ஜியம் தேவை” என்று சொன்னார். அதனால் தான் இவர் பிறந்த நாள் அன்று முதன் முதலில் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. கிராம சபா கூட்டத்தின் போது மக்களுடைய கோரிக்கைகள் பட்டா வேண்டும் என்றும், சாலை பராமாரிப்பு, சாக்கடை தூய்மை படுத்துதல் புதிய பாலம் கட்டுவது புதிய அங்கன்வாடி மையம் கட்டுவது, புதிய ரேஷன் கடை கட்டுவது போன்ற ஊருக்கான தேவையை பூர்த்தி செய்தவற்கு தான் கிராமசபா கூட்டம் நடத்தப்படுகிறது. பல்வேறு வகையில் நாட்டிற்கு வேண்டிய மத்திய, மாநில அரசின் மூலம் பல்வேறு திட்டங்களை உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்தார்கள். அதே போல் மாநில அரசாங்கத்தை பொறுத்த வரையில் முதலமைச்சரின் பசுமை வீடு, தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட நிதி வருவாய் திட்டம், நபார்டு சாலை திட்டம், மாநில நிதிக்குழு ஆகிய மத்திய, மாநில நிதியாக இருந்தாலும், அந்த திட்டத்திற்கு முறையாக பயன்படுத்தி சம்மந்தப்பட்ட துறையினரின் செயலாளர்களிடம் பேசி, அந்தந்த மாவட்டத்திற்கு சரியான நிதி ஒதுக்கி செய்து ஊராட்சி மன்றத்தில் ஊராட்சிகள் செய்ய வேண்டிய பணியை சரியாக செய்ய வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.
உத்தமர் காந்தியடிகள் 153-வது பிறந்த நாளை முன்னிட்டு கிராம சபையின் போது வருவாய்த்துறையின் மூலம் 1 பயனாளிக்கு வீட்டுமனை பட்டா, 2 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 1 பயனாளிக்கு ரூ.7,650ஃ- மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள்களும், கூட்டுறவுத்துறையின் மூலம் 6 பயனாளிக்கு 6,82,000, மதிப்பிலான பயிர்க்கடனும், வேளாண்மைத்துறையின் மூலம் 7 பயனாளிகளுக்கு ரூ.38,064 மதிப்பிலான வேளாண்மை கருவிகளுக்கான மானியமும், தோட்டக் கலைத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.1,06,694 மதிப்பிலான சொட்டுநீர் பாசன கருவிகள், விதைகள் வழங்குதல், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (றிஆயுலுபு) திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு தலா ரூ.2,40,000 வீதம் ரூ.9,60,000 மும், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுவின் மூலம் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000 வீதம் 2,50,000 மதிப்பில் சமூக முதலீட்டு நிதியும், 1 பயனாளிக்கு ரூ.2,00,000 மதிப்பில் வங்கி நேரடி கடனும், ஆக மொத்தம் 22.44 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் (செங்கம்) மு.பெ.கிரி, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துக்குமரசாமி, தென்கரும்பலூர் ஊராட்சிமன்ற தலைவர் பாஸ்கர், வட்டார வளாச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.