கும்பகோணம், ஜூலை. 23 –

கும்பகோணம் அருகே உள்ள திருக்கோடிக்காவல் எனும் ஊரில் முன்விரோதம் காரணமாக வாலிபரை அரிவாளால் வெட்டியதில் அவரது இடது கை துண்டானது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவிடைமருதூர் தாலுக்கா, திருக்கோடிக்காவல் காவேரி நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் ஐயப்பன் (38). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சின்னதுரை மகன் பிரகாஷ் (24) என்பவருக்கும் கடந்த ஓராண்டு காலமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

அதன் காரணமாக இன்று மதியம் திருக்கோடிக்காவலில் உள்ள டிஎன்சி அருகே சென்றிருந்த ஐயப்பனிடம், பிரகாஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு முற்றியதில் பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த செல்வமணி (26), முருகதாஸ் (23), லெனின் (22), பாலகிருஷ்ணன் (25) ஆகியோரின் உதவியோடு மறைத்து வைத்திருந்த அருவாளால் ஐயப்பனை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் ஐயப்பனின் இடது கை துண்டானது. மேலும் வலது காலில் பலத்த காயமும், வலது கையில் மூன்று விரல்களும் துண்டானது. பின்னர் வெட்டுபட்ட ஐயப்பனை அருகே இருந்த ஆற்றின் கரையில் வீசி விட்டு குற்றவாளிகள் தப்பி சென்றுள்ளனர்.

இதனைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் பந்தநல்லூர் காவல்துறையினருக்கு கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ஐயப்பனை மீட்டு  கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் கட்ட மருத்துவச் சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து பந்தநல்லூர் காவல்துறையினர் தீவிர தேடுதலுக்கு பின் பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here