கும்பகோணம், செப். 15 –
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் சாலையை சேர்ந்தவர் ராஜ்மோகன். இவரது வீட்டிற்கு டைல்ஸ் வாங்குவதற்காக திருவலஞ்சுழியில் உள்ள தனியார் கடையில் டைல்ஸ் வாங்கிவிட்டு தனது மகள் பவித்ரா மற்றும் உறவினர் ராஜேந்திரன் ஆகியோருடன் ஆம்னி காரில் வலங்கைமானில் உள்ள தனது வீட்டிற்கு தாராசுரம் டூ தஞ்சை செல்லும் சாலையில் சென்றுக் கொண்டிருக்கும் போது, காரில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக காரின் முன் பகுதியில் தீ கசிந்துள்ளது. இதனை எதிரே வந்த கார் ஓட்டுநர் இவர்களுக்கு அறிவுறுத்தியதால், ஆம்னி காரை ஓட்டி வந்த ராஜேந்திரன் உடனடியாக காரை நிறுத்தி, மூன்று பேரும் கீழ் இறங்கிய நிலையில் காரில் வேகமாக தீ பிடிக்க ஆரம்பித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ராஜ்மோகன் தாலுக்கா காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் எரிந்து கொண்டிருந்த காரை தண்ணீர் இறைத்து அணைத்தனர். மேலும் இவ்விபத்து தொடர்பாக தாலுகா காவல்நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் அரைமணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.






















