கும்பகோணம், ஏப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், கீழ்மாந்தூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைப்பெற்ற தீ மிதி விழாவில் 1500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், பந்தநல்லூர் அடுத்த கீழ்மாந்தூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கமாகும்.
அதுபோல இவ்வாண்டும் அவ்விழா கடந்த 17 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் நிகழ்ச்சி தொடங்கி தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு மண்டகப்படி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று தீமிதி திருவிழாவில் பத்து நாட்கள் விரதம் இருந்து 1500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழியில் இறங்குதல் எனும் தீமிதி நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.
மேலும் அத் தீ மிதி திருவிழாவை காண உள்ளூர் மட்டுமல்லாது, சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதி திருவிழாவில் கலந்து கொண்டனர். மேலும் நாளை சிறப்பு ஆர்கெஸ்ட்ராவுடன் இவ்வாண்டுக்கான சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
தீமிதி திருவிழாவில் தீயணைப்புத் துறையினர் மருத்துவத் துறையினர் நூற்றுக்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராமவாசிகள் ஆலய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் இளைஞர்கள் உள்ளிட்டோர் வெகுச் சிறப்பாக செய்திருந்தனர்.




















