மயிலாடுதுறை, மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திர சேகர்
சீர்காழி அருகேவுள்ள எடமணல் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் தார் கலவை தொழிற்சாலையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அதில் பங்கேற்ற 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைது செய்தனர். தேர்தல் நடத்தை விதிகளை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதால் கைது நடவடிக்கை காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள எடமணல் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தார் கலவை தயாரிக்கும் தொழிற்சாலை கடந்த சில மாதங்களாக இயங்கி வருகிறது.
அத்தொழிற்சாலை ஆரம்ப பணிகள் துவங்கிய காலத்தில் இருந்து சுற்று வட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தார் தொழிற்சாலை தங்கள் பகுதியில் அமையக்கூடாது என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
அதனை தொடர்ந்து ஒவ்வொரு முறையும் அமைதி பேச்சு வார்த்தை நடத்திய அதிகாரிகள் தார் தொழிற்சாலை அமைவதை தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டுகளை அப்பகுதி வாழ் மக்கள் எழுப்புகின்றனர்.
மேலும் இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தார் தொழிற்சாலை முழுவதுமாக இயங்கத் துவங்கியதால் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகை மற்றும் ஐல்லி துகள்களால் சுற்று வட்டார பகுதி மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் அதனால் பெரும்கோபம் கொண்ட எடமணல், திருநகரி, வேட்டங்குடி, உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தை அறிவித்தனர். அதனை அடுத்து எடமணல் கடைவீதியில் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபடுவதற்காக குவிந்தனர். அத்தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த சீர்காழி போலீசார் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் எவ்வித போராட்டங்களிலும் ஈடுபடக் கூடாது என அறிவித்தனர்.
ஆனால் அதனையும் மீறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200 க்கும் மேற்பட்ட கிராம மக்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். அதனால் சீர்காழி திருமுல்லைவாசல் சாலையில் அரை மணி நேரத்திறுக்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.