செங்குன்றம், ஜூலை. 02 –
திருவள்ளூர் மாவட்டம், சென்னை அடுத்துள்ள செங்குன்றத்தில், மணிப்பூர் மாநிலத்தில் நடைப்பெற்று வரும் கலவரம் குறித்து, அம்மாநில பாஷக தலைமையிலான அரசும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும் அக்கலவரத்தை தடுத்திடும் மற்றும் அடக்கிடும் ஒழுங்கு நடவடிக்கைகளை சரிவர மேற் கொள்ளவில்லை எனக் கூறி, அதனைக் கண்டிக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சித்துறை பிரிவு சார்பில், நடைப்பயணம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இவ்வார்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஆராய்ச்சி துறை பிரிவு மாநிலத் துணைத் தலைவர் வெள்ளிகுமார் தலைமையேற்க, செங்குன்றம் நகர தலைவர் கோபி, மாநில ஒருங்கிணைப்பாளர் நாகூர் மீரான், மாநில பொதுச் செயலாளர் சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
மேலும், இவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்று தமிழ்நாடு ஆராய்ச்சித்துறை திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் மகிமை ராஜ் வரவேற்புரை நல்கினார்.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறை மாநிலத் தலைவர் மாணிக்கவாசகம், திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் லயன்.டி.ரமேஷ், தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை அலி அல் புகாரி, தமிழ்நாடு காங்கிரஸ் சட்டத்துறை திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் குபேந்திரன், உள்ளிட்டவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
தொடர்ந்து அவர்கள் உரை நிகழ்த்தும் போது, மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் மோடி அரசு தான் முக்கிய காரணம் என்றும், அதனை கண்டு கொள்ளாத பிரதமர் மோடி வெளிநாடு சுற்றுப்பயணம் சென்று கொண்டிருக்கிறார் என்றும் மதத்தையும், ஜாதியையும், பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம் என்றவாறு அப்போது கண்டன முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக செங்குன்றம் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம், மோடி அரசை கண்டித்து முழக்கமிட்டு நடைபயணம் மேற்கொண்டனர். இதில் மாநில பொதுச் செயலாளர் மோகன், வெங்கடேசன்,வட்டாரத் தலைவர் புருஷோத்தமன்,உள்ளிட்ட திரளான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறை சார்பில் மாவட்ட ,ஒன்றிய ,நகர, உள்ளிட்ட திரளான காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.