திருவாரூர், ஜூன். 01 –
திருவாரூர் அடுத்துள்ள காட்டூரில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு அபிராமி் அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அப்பகுதியில் உள்ளது. அத்திருக்கோயிலின் மகாகும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைப்பெற்றது.
அதனை முன்னிட்டு, பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு சுவாமிக்கும், அம்பாளுக்கும் நவாக்கின குண்டங்கள் அமைக்கப்பட்டு கடந்த 29.5.23 அன்று யாகசாலை பூஜைகளுடன் மகா கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் துவங்கி நடைப்பெற்றது.
அதனைத்தொடர்ந்து இன்று காலை, ஆறாம் கால யாகபூஜைகள் துவங்கி நடைப்பெற்று பூர்ணாஹூதி, மகா தீபாரதனைகள் நடைப்பெற்றன.
பின்னர் மல்லாரி இசை முழங்க யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து கொண்டு, யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலய வலம் வந்து மேற்குராஜ கோபுரம், தெற்கு கோபுரம் சுவாமி, அம்பாள், நடராஜர், சோமாஸ்கந்தர், வினாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வர் ஆகிய சன்னதிகளின் விமான கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் கடங்களில் இருந்த புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.
தொடர்ந்து அருள்மிகு சுந்தரேஸ்வரர், அபிராமி்அம்மன் ஆகிய சுவாமிகளுக்கு புனித நீரை ஊற்றி அபிஷேகம் நடைப்பெற்றது. தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு மஹாதீபாரதனை நடைப்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டு கோபுரம் மற்றும் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்களும் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது. இன்று மாலை அபிராமி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரர் சுவாமிக்கும் திருக்கல்யாண வைபவமும் அதனை தொடர்ந்து இரவு வீதிவுலா காட்சியும் நடைபெற உள்ளது.






















