மீஞ்சூர், மே. 16 –
மீஞ்சூர் பகுதியில் உள்ள திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் எப்போதும் போக்குவரத்திற்கு இடையூறாகவும் மேலும் விபத்துக்கள் ஏற்படும் வகையிலும் அப்பகுதியில் சரக்கு லாரிகளை நிறுத்தி வந்த லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு, போக்குவரத்து மற்றும் மீஞ்சூர் காவல் நிலைய காவல்துறையினர் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் தொடர்ந்து லாரிகளை நிறுத்தி வைத்திருந்தவர்களுக்கு இன்று ரூ. ஆயிரம் முதல் நான்காயிரம் வரை அபராதம் விதித்து, மேலும் தொடர்ந்து இப்பகுதியில் கனரக வாகனங்களை நிறுத்தினால் ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என அவர்களை எச்சரித்து அனுப்பினார்கள். இதனால் அப்பகுதி லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் அரண்டு போய் உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட திருவெற்றியூர் நெடுஞ்சாலையை ஒட்டி காமராஜர் துறைமுகம், எல்.அன்.டி துறைமுகம், நிலக்கரி யார்டு, எண்ணைய் நிறுனங்கள், சிமெண்ட் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இப்பகுதியில் உள்ளன.
அதனைத் தொடர்ந்து இப்பகுதியில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் இத் திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் பயணித்து வருகின்றது. இந்நிலையில், திருவெற்றியூர் முதல் மீஞ்சூர் பொன்னேரி பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் நோ பார்க்கிங் ஏரியாவினை ஆக்கிரமித்து போக்குவரத்து பாதிப்பினை ஏற்படுத்தும் வகையிலும், சாலை விபத்துக்களை ஏற்படுத்தும் வகையிலும் ஆங்காங்கே சாலையோரங்களில் லாரிகளை நிறுத்திவிட்டு, லாரி ஓட்டுநர்கள் பொறுப்பின்றி வெகு நேரமாக வேறு பகுதிகளுக்கு சென்று விடுகின்றனர்.
அதனால் அச்சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் லாரிகளால் போக்கு வரத்துப் பாதிப்புகள் ஏற்படும்போது, அதனை ஒழுங்குப்படுத்த முடியாமல் போக்குவரத்து காவல்துறையினர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அவசர ஊர்திகள் உள்ளிட்ட அப்பகுதிகளில் வசிக்கும் பாதசாரிகள் வரை மிகவும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருவது தொடர் கதையாகவே அப்பகுதியில் நடைப்பெற்று வந்ததது. அப்பிரச்சினைக் குறித்து போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கு காவல்துறையினர் லாரி ஓட்டநர் மற்றும் லாரி உரிமையாளர்களிடம் பலமுறை எடுத்துக் கூறியும், அவர்கள் அதனைப் பொருட்படுத்தாமல் அச்செயலில் திரும்ப திரும்ப செய்து வந்தனர்.
இந்நிலையில் ஆவடி காவல் ஆணையரகத்தின் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரிலும், துணை ஆணையர் ஜெயலட்சுமி ஆலோசனைப் படியும், போக்குவரத்து உதவி ஆணையர் மலைச்சாமி மேற்பார்வையிலும், போக்குவரத்து ஆய்வாளர் சோபிராஜ் தலைமையிலும், உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள் உள்ளிட்டவர்கள் இன்று திருவொற்றியூர் முதல் மீஞ்சூர் வரை நெடுஞ்சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட லாரிகளின் ஓட்டுனர்களை தேடி பிடித்து ஆயிரம் ரூபாய் முதல் நான்காயிரம் ரூபாய் வரை நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளுக்கு அபராதம் விதித்தனர்.
மேலும், ஓட்டுநர்கள் இல்லாத வாகனங்களில் ரசீதை அதில் வைத்துச் சென்றனர். மேலும் தொடர்ந்து லாரிகளை சாலையில் நிறுத்துபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வரை கூடுதல் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்து லாரிகளை சாலையில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்தினார்கள்.
இந்நிலையில் போக்குவரத்து மற்றும் காவல்துறையினரின் இந்த அதிரடி அபராதம் விதிப்பு காரணமாக ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் அரண்டுப் போய்வுள்ளனர்.