மயிலாடுதுறை, பிப். 18 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ….

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி.கே. பழனிச்சாமி  முன்னிலையில் சிறுபான்மையினர் உட்பட 3000 பேர் மாற்று கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க வில் இணையும் விழா நடைப்பெற்றது.

முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், காமராஜ், இன்னாள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். கட்சியில் சேர்ந்தவர்களை வாழ்த்தி வரவேற்று எடப்பாடி கே பழனிச்சாமி பேசியதாவது.

முன்னதாக சீர்காழிக்கு வருகைத் தந்த அதிமுக பொதுச் செயலளார் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்ப்பினை சீர்காழி மாவட்ட அதிமுக தொண்டர்கள் வழங்கினார்கள்.

தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் உள்ளன ஆனால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி தான் உண்மையான ஜனநாயக கட்சி எனவும் மேலும் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சாதாரண தொண்டன் மட்டுமே கட்சியின் முதன்மை நிலைக்கு வர முடியுமென அப்போது அவர் தெரிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தை தனியாக பிரித்து புதிய மாவட்டமாக அறிவித்ததும், சீர்காழியை வருவாய் கோட்டமாக அமைத்ததும் அதிமுக அரசுதான், ஏழை எளிய மக்களின் கல்வியை கருத்தில் கொண்டு சீர்காழியில் அரசு கலைக்கல்லூரி கொண்டு வந்ததும், அதிமுக அரசுதான் என்றார் அவர். .

மேலும் டெல்டா மாவட்ட விவசாயிகளை பாதுகாக்கும் விதமாக டெல்டா பகுதி முழுவதையும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவித்ததும் அதிமுக அரசுதான் எனத் தெரிவித்தார்.

கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது அமைச்சராக இருந்த ஸ்டாலின் தான் மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டார் எனக் குற்றம் சாட்டினார். மீத்தேன் ஈத்தேன் திட்டங்களுக்கு கையெழுத்து போட்டு கொண்டு வந்தவர் இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின்தான். அதனை தடுத்து நிறுத்தியது அ திமுக அரசுதான் என்றார்.

குடிமராமத்து திட்டத்தின் மூலமாக டெல்டா மாவட்டத்தில் உள்ள ஆறு குளங்கள் ஏரிகள் முழுவதுமாக தூர்வாரப்பட்டது. அதனை விவசாயிகளே முழுமையாக பயன்படுத்திக் கொண்டனர். ஒரு பிடி மண்ணை கூட மற்றவர் எடுக்க முடியாமல் பாதுகாத்து விவசாயிகளை பாதுகாத்தது அதிமுக அரசுதான்.

அதனைப்போல் பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் இந்தியாவிலேயே அதிகபட்சமாக தொகையை விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுத்த ஒரே அரசு அதிமுக அரசுதான் என்றார்.

மேலும் இன்றைய தி.மு.க வின் நிலை என்ன ஜூன் மாதம் முதல்வர் தண்ணீரை திறந்து விட்டார். நமக்கு கிடைக்க வேண்டிய பங்கு நீரை கர்நாடகத்தில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலினால் பெற முடியவில்லை தண்ணீர் வராத காரணத்தினால் இரண்டு மாதங்களில் தண்ணீர் இல்லாமல் போனது. இதனால் டெல்டா மாவட்டம் முழுவதும் குருவை பயிர்கள் காய்ந்து கருகி பாதிக்கப்பட்டது எனப்போது எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

மேலும் விடியா திமுக அரசு பதவி ஏற்றதிலிருந்து மூன்று ஆண்டுகளாக குருவை சாகுபடி காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவும் அதனால் 3.5 லட்சம் ஏக்கர் குருவை சாகுபடி காய்ந்து பாதிக்கப்பட்டது. ஒரு எக்டருக்கு 84 ஆயிரம் ரூபாய் கிடைத்திருக்க வேண்டும் ஆனால் கிடைக்கவில்லை.என தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு எதிரான கட்சி திமுக எனவும் மேலும் .மத்திய அரசு வீடு கட்டும் திட்டம் கைவிடப்பட்டது. அதனை மாநில அரசும் கண்டு கொள்ளாமல் கைவிட்டு விட்டது. அதனால் ஏழை எளிய மக்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

ஏழை எளிய மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதற்காக நமது அரசால் வழங்கப்பட்ட மடிக்கணினி வழங்கும் திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிறுத்தியதுதான் திமுக அரசின் சாதனை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எடப்பாடி எழுப்பினார்.

ஏழை எளிய மக்களின் நலன் கருதி கிராமப்புறங்களில் அம்மா மினி கிளினிக் ஆரம்பித்து சிகிச்சை பெறும் முறையை கொண்டு வந்தோம். அதையும் விடியா திமுக அரசு மூடிவிட்டது. ஏழைகளுக்கு சிகிச்சை செய்வதையும் தடுத்த சாதனையும் அவர்களையே சேரும் என்றார்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ஊர் ஊராக பேசினார்கள். ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு தான் என தெரிவித்தார். ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது என்ன செய்தார். இன்றும் பல்வேறு கூட்டங்களில் உதயநிதி ஸ்டாலின் பேசி வருகிறார். நீட் தேர்விற்கு ரத்து செய்வதற்கான ரகசியம் உள்ளது என கூறி வருகிறார் அதன் ரகசியம் என்ன என்று இதுவரை கூறவில்லை என்று கிண்டலடிக்கும் வகையில் தெரிவித்த அவர் மேலும் நீட் தேர்வு ரத்து செய்வதற்காக இளைஞர்களிடம் கையெழுத்து வாங்கி ஜனாதிபதியிடம் கொடுப்பதாக தெரிவித்தனர். அதுவும் பயனற்று குப்பைத்தொட்டியில்தான் தற்போது கிடக்கிறது. அவர்களது அறிவிப்பு பிரமாண்டமாக இருக்கும் மக்களை ஏமாற்றுவதும் பிரமாண்டமாக இருக்கும் பேச்சில் கவர்ச்சி இருக்கும் மக்களை ஏமாற்றுவதற்காக அப்படித்தான் பேசுவார்கள் என்றார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி.

ஏழை மாணவர்களும் மருத்துவராக வேண்டும் என்பதற்காக அரசு பள்ளி மாணவர்களுக்காக மருத்துவ கல்வியில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கியது அதிமுக அரசுதான் மேலும் ஏழை மாணவர்களின் நலன் கருதி அந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தையும் அதிமுக அரசு செலுத்தும் என்பதை உருவாக்கினோம் அதன் காரணமாக ஏழை மாணவர்களால் மருத்துவராக முடிந்தது. ஆனால் இன்று திமுக மக்களை ஏமாற்றி வருகிறது

டெல்டா விவசாயிகளின் நலன் கருதி மும்முனை மின்சாரத்தை தடையின்றி வழங்கி வந்தோம் ஆனால் இவர்களது ஆட்சியில் மின்சாரம் எப்போது வருகிறது போகிறது எனத் தெரியவில்லை என்றார்.

மூன்றாண்டு காலமாக சிறுபான்மையினரைக் கண்டுகொள்ளாத முதலமைச்சர், அதிமுக பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என அறிவித்தவுடன் 2019 போல சிறுபான்மையினர் மக்கள் எங்களை தேடி வருகிறார்கள். தற்போதைய முதலமைச்சர் சிறுபான்மையினர் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மூன்று ஆண்டுகளாக பேசாதவர் இப்பொழுது பேச்சுவார்த்தை நடத்துவது ஏன் எனக்கேள்வி யெழுப்பினார்.

ஏ.பி.ஜே அப்துல் கலாம் ஜனாதிபதி ஆவதற்கு ஆதரவளித்து, வாக்களித்தது அதிமுக தான். ஆனால் அவருக்கு எதிராக வாக்களித்தது திமுக. இவர்களா சிறுபான்மையினருக்கு பாதுகாவலர்கள் என்ற அவர், உண்மையில் சிறுபான்மையின மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்தது அதிமுக தான். மேலும் காவிரி பிரச்சனையைப் பொருத்தவரையில் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது இங்கே திமுக ஆட்சி நடக்கிறது இருவரும் இந்தியா கூட்டணியில் அங்கம் விற்கிறார்கள் ஆனால் ஏன் இவர்கள் தண்ணீர் பெற்று தர முடியவில்லை என்ற அவர், நாட்டு மக்களை பற்றி கவலைப்படாத முதலமைச்சர் இன்றைய முதலமைச்சர் அவர்கள் கொள்ளையடித்த பணத்தை காப்பாற்றுவதுதான் அவர்களுடைய தலையாய கடமையாக உள்ளது. எனவும், மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு சரியான பாடத்தை புகட்டுங்கள் பதிலடி கொடுங்கள் இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழ்நாடு என ஸ்டாலின் பேசி வருகிறார். ஆனால் கடன் வாங்குவதில்தான் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது ஊழல் செய்வதில் முதலிடம் வகிக்கிறதென்றார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here