கும்பகோணம், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
மாசிமக பிரமோற்சவத்தை முன்னிட்டு, நேற்று கும்பகோணம் மாநகரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீசக்ரபாணிசுவாமி, ஆதி வராகப் பெருமாள், ராஜகோபால சுவாமி ஆகிய மூன்று திருக்கோயில்களில் கொடியேற்றத்துடன் இவ்வாண்டிற்கான விழா தொடங்கியது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் ஆண்டு தோறும் 12 சைவ திருத்தலங்கள் மற்றும் 5 வைணவ ஸ்தலங்களுடன் இணைந்து ஒருசேர பத்து நாள் விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கமாக நடைப்பெற்று வருகிறது.
அதுப் போன்று நடப்பாண்டிற்கான மாசிமக பிரமோற்சவத்தின் துவக்கமாக நேற்று அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாதர் கௌதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், வியாழசோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் என 5 சைவ திருத்தலங்களில் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. மேலும் பிற ஆறு சைவத்தலங்களில் மாசிமகப் பெருவிழா ஏகதின உற்சவமாக நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து, இன்று வைண ஸ்தலமான சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில் உற்சவர் சக்ரபாணிசுவாமி, விஜயவள்ளி தாயார் மற்றும் சுதர்சனவள்ளி தாயாருடன் கொடிமரம் அருகே எழுந்தருள, பட்டாட்சார்கள் வேத மந்திரங்கள் ஜபிக்க, நாதஸ்வர மேள தாள மங்கள் வாத்தியங்கள் ஒலிக்க, ஸ்ரீ பெரிய திருவடி என போற்றப்படும் கருடாழ்வார் சின்னம் வரையப்பெற்ற திருக்கொடி தங்க கொடிமரத்தில் ஏற்றபட்டு அலங்கார தீபாராதனை செய்யப்பட்டது.
அந்நிகழ்வினைக் காண வந்திருந்த ஏராளமான பக்தர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மனமுருகி சுவாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அருள்மிகு இராஜகோபாலசுவாமி திருக்கோயில் மற்றும் ஆதிவராகப்பெருமாள் திருக்கோயில் ஆகிய வைணவ தலங்களிலும் மாசிமக பிரமோற்சவ கொடியேற்றம் இன்று வெகுச் சிறப்பாக நடைபெற்றது. என்பது குறிப்பிடதக்கதாகும்.
மேலும் மாசிமக பிரமோற்சவத்தை முன்னிட்டு தினமும் காலை மாலையில் சூரியபிரபை, ஷேச வாகனம், கருட வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறும்.
மேலும் மாசிமக பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 24 ஆம் தேதி சனிக்கிழமை காலை சக்கரபாணிசுவாமி திருத்தேரோட்டமும், நண்பகல் 12 சைவத்திருத்தலங்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் மகாமககுளத்தின் நான்கு கரைகளிலும் ஒருசேர எழுந்தருள, மாசிமக தீர்த்தவாரி நடைபெறுகிறது.
அத்தீர்த்தவாரி நிகழ்வின் போது, ஏராளமானோர் மகாமக திருக்குளத்திலும், காவிரியிலும் புனித நீராடி கரைகளில் எழுந்தருளி அருள்பாலிக்கும் சுவாமிகளை தரிசனம் செய்து தங்கள் பிறவிப் பயனை அடைவதுப் போன்ற மனநிலை கொள்வார்கள் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.