மதுக்கூர், ஜன. 24 –
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரம், காரப்பங்காடு ஊராட்சியில் இன்று கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அவ்வட்டார விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் விழா நடைப்பெற்றது.
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நல துறையின் மூலம் மதுக்கூர் வட்டாரத்தில் உள்ள பத்து ஊராட்சிகளில் இந்த ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று காரப்பங்காடு ஊராட்சியில் மதுக்கூர் வட்டார அட்மா திட்ட தலைவர் இளங்கோ தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில், அவர் இவ்வூராட்சியில் உள்ள கிராம விவசாயிகளின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா இரண்டு தென்னம்பிள்ளைகள் வழங்கி விழாவினை துவக்கி வைத்தார்.
மேலும் அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு திட்டமான நெல்லுக்கு பின் உளுந்து திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 50% மானியத்தில் உளுந்து விதைகளை அட்மா திட்ட தலைவர் மற்றும் காரப்பங்காடு ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி பெருமாள் ஆகியோர் அக்கிராம விவசாயிகளுக்கு வழங்கினார்கள்.
மேலும் இந்நிகழ்வில் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி மற்றும் துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி ஆகியோர் நெட்டை தென்னை கன்றுகளின் சிறப்பு மற்றும் அதன் நடவு முறைகள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.
தொடர்ந்து, தஞ்சாவூர் ஆர் வி எஸ் வேளாண் கல்லூரியை சேர்ந்த பயிற்சி மாணவர்கள் விவசாயிகளுக்கு உழவன் செயலி பயன்படுத்தும் முறை பற்றி எடுத்துக் கூறியதோடு, விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்குவதற்கான பதிவு பணியிலும் அக்கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர்.
மேலும், அட்மா திட்ட அலுவலர்கள் சுகிதா அன்புமணி ராஜு ஆகியோர் உழவன் செயலியை பயன்படுத்தி அரசின் திட்டங்கள் பெறும் முறை பற்றி முன்பதிவு செய்வது பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.
இந்நிகழ்வில் மதுக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜமாணிக்கம் உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை 100% மானியத்தில் வழங்கினார்.
மேலும் இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காரப்பங்காடு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மிகச் சிறப்பாக செய்து இருந்தனர். விழாவின் நிறைவில் இவ்விழா மிகச்சிறப்பாக நடைப்பெற ஒத்துழைப்பு நல்கியவர்களுக்கும் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி தனது நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.