பாபநாசம், மார்ச். 20 –
கும்பகோணம் அருகே பாபநாசத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாமன்னர் ராஜராஜ சோழன் பாரம்பரிய வீரக்கலை சிலம்பப்பள்ளி ஆசான் கீழவழுத்தூர் தினேஷ் மற்றும் சுஷ்மிதா திருமண வரவேற்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சிலம்ப பள்ளி மாணவ மாணவிகள் தமிழர்களின் தற்காப்பு கலையான சிலம்பம் சுற்றி மணமக்களை வரவேற்பு மேடைக்கு அழைத்து வந்தனர். மேலும் மணமக்களை வாழ்த்த வந்திருந்தவர்களை மகிழ்விக்க சிலம்பம், மான்கொம்பு, வேல் கம்பு, புலி ஆட்டம் போன்ற விளையாட்டுகளை மண்டபத்தில் விளையாடி அனைவரையும் மகிழ்வித்தனர்.
அப்போது மணமக்கள் உணர்ச்சிப் பெருக்கெடுப்பில் சிலம்ப கலையை பாதுகாப்போம், சிலம்பக் கலையை வளர்ப்போம் என்றவாறு முழக்கமிட்டு, மணமக்கள் இருவரும் சேர்ந்து சிலம்பம் விளையாடி திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றனர்.
இதனைக் கண்ட அனைவரும் மணமக்கள் தினேஷும் சுஷ்மிதாவும் சிலம்பக் கலையின் மீது கொண்டுள்ள பற்று மற்றும் பக்தியை பாராட்டி இக்கலைவுணர்வோடு பல்லாண்டு வாழ்க என மணமக்களை வாழ்த்தினார்கள்.
மேலும் இக்காலகட்டத்தில் திருமண விழா நிகழ்வுகளில் ஆட்டம், பாட்டம், ஆர்கெஸ்ட்ரா என்று திருமண வீட்டார்கள் பெரும் பொருட் செலவில் ஏற்பாடு செய்து கொண்டாடி வருகின்றனர். இந்த காலகட்டத்தில் மணமக்கள் சிலம்பக் கலையை மண்டபத்தில் நிகழ்த்தி காட்டியது புதுமையாக உள்ளதாக திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
மேலும் இக்கலை மென்மேலும் வளர வேண்டுமெனில், இதுப்போன்ற நிகழ்ச்சிகளில் இவ்வாறான பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டாட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அப்போது திருமணவரவேற்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில், அன்னைக் கல்லூரி தாளாளர் ஹிமாயுன்கபிர், விவேகானந்தா தொண்டு நிறுவன தலைவர் தேவராஜன், சமூகஆர்வலர் குமார், பாவை தமிழ் மன்ற செயலாளர் கோடையிடி குருசாமி, துனண செயலாளர் சிவக்குமார், உறுப்பினர்கள் அஷ்ரப்அலி உட்பட இரு வீட்டார்கள், உறவினர்கள், கிராமமக்கள் என இத்திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று விழா சிறப்பாக அமைய துணை நின்றனர்.