திருவாரூர், பிப். 19 –
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா திருபாம்புரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசேஷபுரிஸ்வரர் சிவாலயம் தென்காலஹஸ்தி என பக்தர்களால் போற்றப்படும் புராதன சிறப்புமிக்க ஸ்தலமாகும்.
மேலும், இவ்வாலயம் குறித்து அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் தேவாரப் பதிகங்களில் இவ்வாலய சிறப்பினை பாடியுள்ளனர் மேலும், நவகிரகங்களின் ராகுவும் கேதுவும் இணைந்து அருள் பாலிக்கும் ஒரே ஸ்தலமாக இவ்வாலயம் விளங்கி வருகிறது.
பல்வேறு சிறப்புகளைக் தன்னகத்தே கொண்டுள்ள இவ்வாலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, நான்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மூலவர் ஸ்ரீ சேஷ புரீஸ்வரருக்கு மஞ்சள், திரவியப்பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் முதலான வாசனை நறுமன திரவியப் பொருட்களைக் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து வில்வ இலை மற்றும் வண்ண வண்ண மலர்களை கொண்டு சகஸ்ரநாம அர்ஜனையும் மகா தீபாரதனையும் நடைபெற்றது. மேலும் மகா சிவராத்திரி நாளில் திரளான பக்தர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று, விடிய விடிய கண்விழித்து இறைவனை தரிசனம் செய்தனர்.