கும்பகோணம், ஜூன். 17 –
கும்பகோணம் அருகே உள்ள பிள்ளையாய்பேட்டை நூறாண்டுகளுக்கு மேலான பழமையான ஸ்ரீபாம்பணிமாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பிள்ளையாம்பேட்டையில் அருள்மிகு ஸ்ரீபாம்பணி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் நூறாண்டுக்கு மேலான மிகவும் பழமை வாய்ந்த திருக்கோயில் ஆகும். அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாம்பு தீண்டி யாரும் இறந்ததில்லை என்று கூறப்படுகிறது. மேலும், இந்தக் கோவிலில் பல ஆண்டுகளுக்கு முன் பூசாரி ஒருவர் கோவிலை இரவு சாத்திய பிறகு அப்பகுதியில் உள்ள ஒரு குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் விபூதி போட வேண்டும் என ஒரு குழந்தையை தூக்கி வந்துள்ளனர்.
அப்பொழுது அந்த பூசாரி கோவிலின் கதவை திறந்து திருநீரை எடுக்கும் போது அந்த பூசாரியை பாம்பு தீண்டியது. உடனே அவரை மருத்துவரிடம் அழைத்த போது நான் வரமாட்டேன். இந்த அம்மனே என்னை காப்பாற்றுவாள் என அங்கேயே அவர் இரவு தங்கி விட்டார். மறுநாள் காலை எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் அவர் நல்ல நிலையில் எழுந்து பூஜைகளை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு அந்தப் பகுதியில் ஒருவர் கூட பாம்பு கடித்து இறந்தது இல்லை எனவும் தெரிவிக்கின்றனர். 13 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று இக்கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 13. ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜையுடன் தன பூஜை | மஹாகணபதி ஹோமம், வாஸ்துசாந்தி, கும்ப அலங்காரம், லட்சுமி பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல், கோ பூஜை, பூர்ணா கதி தீபாரதனை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று காலை 5 மணி அளவில் யாகசாலை பூஜைகள் ஆரம்பித்து 7 – மணி அளவில் மஹா தீபாரதனை நடைபெற்ற மேளதாளம் முழங்க கடம்புறப்பாடுடன் ஸ்ரீபாம்பணி மாரியம்மன் கலச கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அம்பாளுக்கு மஹா அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இன்று மாலை 6 மணி அளவில் அம்பாள் சிறப்பு மலர் அலங்காரத்துடன் வீதியுலா காட்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கது.




















