சென்னை, மே. 30 –
தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரில் ‘’கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது’’ வழங்கப்படும் என்று அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
அவ்வகையில், தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு, கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதை 2022 ஆம் ஆண்டு ஜூன் 3-ம் நாள் அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் வழங்க ஏதுவாக, விருதாளரை தேர்வு செய்ய திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைவராகவும், நடிகர் / நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் நடிகர் / இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட தேர்வுக்குழுவினை அமைத்து அரசு இன்று ஆணையிள்ளது.
இத் தேர்வுக்குழுவால் பரிந்துரைக்கப்படும் விருதாளருக்கு விருதுத் தொகையான ரூ.10 இலட்சம் மற்றும் நினைவுப்பரிசு ஆகியவற்றினை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த தினமான ஜூன் 3 ஆம் நாளன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கௌரவிக்கிறார்.