கும்பகோணம், ஜூலை. 14 –
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் நெசவாளர்களுக்கு வழங்கப்பட்ட கொரோனா நிவாரண நிதியை தள்ளுபடி செய்யக்கோரி நெசவாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
தமிழகத்தில் லாபத்தில் இயங்கக்கூடிய ஒரு சில கூட்டுறவு நிறுவனங்களில் முதன்மையான நிறுவனமாக திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் சுமார் 45 கோடி ரூபாய் அளவிற்கு பட்டு சேலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், இந்த கூட்டுறவு நிறுவனத்தில் சுமார் 2500 நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பட்டு சேலை விற்பனை குறைந்திருந்த காலகட்டத்தில் நெசவாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் நான்காயிரம் வழங்கப்பட்டது . இதனை தள்ளுபடி செய்யக் கோரி கைத்தறி நெசவாளர்கள் திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, சி ஐ டி யு /ஏ ஐ டி யு சி தொழிற்சங்க நிர்வாகிகள் இப்பிரச்சினைக் குறித்து, இந்நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நெசவாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என அவர் உறுதி அளித்ததை தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது.


















