கும்பகோணம், ஜூன். 03 –
கும்பகோணம் தஞ்சை முக்கிய சாலையில் அமைந்துள்ள தாராசுரம் அண்ணா சிலை அருகே உள்ள மாடி வீட்டில் வசிக்கும் விஜய் ஆனந்த் – கீர்த்திகா தம்பதியினரின் ஒன்றரை வயது ஆண் குழந்தையான ஹரி பிரியன், இன்று காலை மாடியில் உள்ள தாழ்வார பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அங்கிருந்து இரும்பு கிரிலில், குழந்தையின் தலை பகுதி மாட்டிக்கொண்டது. இதனால் தலையை வெளியே எடுக்க முடியாமல் குழந்தை அழுதுள்ளது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் அந்த காட்சியை பார்த்து அதிர்ந்தனர். இவர்களின் சத்தத்தை கேட்டு அவ்வழியாக சாலையில் சென்றோர் பலரும் இதனைப் பார்த்து திடுக்கிட்டனர்.
இந்நிலையில் ஒருவர் அவசர அவசரமாக ஆக்ஷா பிளேடு கொண்டு வந்து கிரில் கம்பி ஒன்றை அறுத்து குழந்தையை மீட்கும் முயற்சியில் இறங்கினார். இதற்கிடையே குழந்தையை ஒருவர் பிடித்துக் கொள்ள மற்ற இருவர் கம்பிகளுக்கு இடையே சிக்கிய குழந்தையை மீட்க இரு கம்பிகளையும் வெளிப்புறமாக இழுத்து விலகியதால் குழந்தையின் தலைப்பகுதியை பத்திரமாக வெளியே எடுத்தனர். இதனைக் கண்டு அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பயந்து போன குழந்தையை தாய் தூக்கி சென்று ஆறுதல் படுத்தினார். காயங்கள் இன்று குழந்தை மீட்கப்பட்டதை எண்ணி அப்பகுதியில் இருந்த மக்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டனர்.





















