காஞ்சிபுரத்தில் கோவில் அருகே சாமி படத்திற்கு செருப்பு அணிவிக்கப் பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் கொண்ட்டு பூஜை பொருள் விற்பனை செய்யும் கடையை அடித்து உடைத்த பாஜக, இந்து முன்னணியினர் 7 பேரை சிவகாஞ்சி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரம், செப். 5 –
காஞ்சிபுரம் சங்குபாணி விநாயகர் கோவில் அருகே கடந்த 2 ந் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி வழங்க வேண்டி இந்து முன்னணி மற்றும் பாஜக வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கோவில் அருகே உள்ள பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் பூபதி என்பவர் ஆர்பாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கடையில் உள்ள சுவாமி படத்துக்கு செருப்பு மாலை அணிவித்திருந்ததாகவும், அதைக் கண்டு ஆத்திரம் அடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த கடையை அடித்து நொறுக்கி பொருட்களை நாசம் செய்துள்ளனர்.
இந்நிலையில் கடை உரிமையாளர் பூபதி மற்றும் அவரது மனைவி ஆகியோரை அடித்து, கொலை மிரட்டல் விடுத்தது, பெண்ணை அவதூறாக பேசியதாக அளித்த புகாரின் பேரில் சிவகாஞ்சி போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் இன்று திடீரென பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் கூரம் விசுவநாதன், நகர தலைவர் அதிசயம் குமார், நகர மேற்கு பொது செயலாளர் ஜீவானந்தம், முன்னாள் நகர தலைவர் ஜெகதீசன், இந்து முன்னணி கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தேவதாஸ், சந்தோஷ் உள்ளிட்ட 7 பேரை சிவகாஞ்சி போலீசார் கைது செய்து காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா மற்றும் உடல்நிலை பரிசோதனைகளை மேற்கொண்டு பின்னர் காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-2 ல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.
பின்னர் நீதிபதி உத்தரவின் பேரில் அவர்களை போலீசார் சிறையில் அடைத்தனர்.
இன்னும் சில நாட்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ள நிலையில் பாஜக, இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவகாரம் காஞ்சிபுரத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.