காஞ்சிபுரம், மே. 19 –
உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அத்தி வரதர் எனப் போற்றப்படும் வரதராஜ பெருமாள் கோவிலில் தேர் திருவிழா இன்று நடைப்பெற்று வருகின்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் தேர் திருவிழாவில் பல்லாயிர கணக்கானோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து ஹரோஹர முழக்கம் இட்டு இழுத்து வருகின்றனர்.
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பத்து நாட்கள் நடைபெறும் வைகாசி பிரம்மோற்சவ விழாவில் முதல் நாள் கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த திருவிழா மூன்றாம் நாள் கருடசேவையை தொடர்ந்து ஏழாம் நாளான இன்று தேர் திருவிழா நடைபெறுகின்றது.
காஞ்சிபுரம் தேரடியில் புறப்பட்ட தேர் காந்திசாலை, மூங்கில் மண்டபம், காமராஜர் சாலை, பேருந்து நிலையம், நான்கு ராஜவீதி வழியாக சென்று மீண்டும் தேரடியில் எல்லையை அடைந்து நிறைவு பெறும்.
இத்தேர் திருவிழாவிற்கு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுவர் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த தேர் திருவிழாவிற்காக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
கொரோனா பரவல் காரணமாகவும், 2019 ஆம் ஆண்டு அத்தி வரதர் திருவிழாவுக்கு பிறகு இந்த ஆண்டு தேர் திருவிழா நடைபெறுவதால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.