![Kallidaikurichi Subhashkarthik Sankaran, who is ranked 118th all India and third in Tamil Nadu in the Indian Civil Service Examination - Minister M.R.K. Panneerselvam expressed appreciation](https://thampattam.in/wp-content/uploads/2023/05/WhatsApp-Image-2023-05-24-at-12.45.33-AM-2.jpeg)
நெல்லை, மே. 24 –
இந்திய குடிமைப்பணி தேர்வில் முதல் முயற்சியிலேயே அகில இந்திய அளவில் 118 வது இடத்தையும், தமிழ்நாடு அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து தேர்ச்சிப்பெற்றுள்ள திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அடுத்துள்ள கல்லிடைக்குறிச்சியில் வசித்து வருபவரும், மேலும், திலகர் வித்யாலயா பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வரும் சங்கரன் மற்றும் லதா தம்பதியர்களின் மகனுமான திலகர் வித்யாலயா பள்ளி முன்னாள் மாணவரும், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முதுநிலை வேளாண்மை பயின்று வரும் சுபாஷ்கார்த்திக் சங்கரன் தனது முதல் முயற்சியிலேயே இந்திய குடிமைப்பணிக்காக நடைப்பெற்ற தேர்வில் அகில இந்திய அளவில் 118 வது இடத்திலும் தமிழ்நாடு அளவில் மூன்றாவது இடத்திலும் தேர்ச்சிப் பெற்றுள்ளார். இந்நிலையில் அவரை இன்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பல்கலைகழகத்திற்கு நேரில் சென்று அம்மாணவரை பாராட்டி தனது வாழ்த்தினை அப்போது தெரிவித்தார்.
மத்திய அரசின் தேர்வாணையம் இந்திய குடிமைப்பணிகளான இந்திய காவல் பணி, இந்திய வெளியுறவுப் பணி, இந்திய வனத்துறை, இந்திய வருவாய்த் துறை ஆகிய பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களைத் தேர்வு செய்து வருகிறது. 2022ம் ஆண்டுக்கான இந்தியக் குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு செப்டம்பர் 16ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை முதன்மைத் தேர்வுகள் நடைபெற்றன. இந்தத் தேர்வின் முடிவுகள் டிசம்பர் 6ஆம் தேதி அன்று வெளியாகின. முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 2023ஆம் ஆண்டு மார்ச் 13 முதல் மே 18 வரை தலைநகர் டெல்லியில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகேவுள்ள கல்லிடைக்குறிச்சியைச் சார்ந்த கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் வேளாண்மை முதுநிலைப் பட்டப் படிப்பு பயின்று வரும் (எம்.எஸ்.சி). சுபாஷ் கார்த்திக் சிவசங்கரன் அகில இந்திய அளவில் 118 வது இடத்தையும் தமிழ்நாடு அளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்து தேர்ச்சிப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் இன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திற்கு நேரில் சென்று அம்மாணவரைப் பாராட்டி தனது வாழ்த்தினை தெரிவித்தார்.
மேலும் இந்திய குடிமைப்பணித் தேர்வில் அகில இந்திய அளவில் 118 வது இடமும், தமிழ்நாடு அளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்த சுபாஷ்கார்த்திக் சங்கரனுக்கு, கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயா பள்ளியின் முன்னாள் பள்ளி மாணவர்கள், மற்றும் பள்ளித்தலைவர், செயலாளர், நிர்வாக குழு உறுப்பினர்கள், தலைமையாசிரியர், மாணவ,மாணவியர்கள் மேலும் அவ்வூர்மக்கள் என திரளானவர்கள் சுபாஷ்கார்த்திக் சங்கரனை நேரிலும் தொலைப்பேசி வாயிலாகவும் அவருக்கு தங்கள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவ்வூர் முழுவதும் பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் சார்பிலும் பேனர்கள் மற்றும்போஸ்டர்கள் ஒட்டியும் தங்களின் எல்லையில்லா மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.