மதுரவாயல், ஏப். 18 –
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கத்தை தவிர்க்கும் வகையிலும் மேலும் அதனால் ஏற்படும் தாகத்தை போக்கும் வகையிலும், அரசியல் கட்சியினர் தொடங்கி பல்வேறு சமுக அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் என்றவாறு அவரவரவர் சமூக பொறுப்புணர்ந்தும் மேலும் மனித நேயத்துடனும் அவ்வெயிலில் வாடும் பொதுமக்கள் தொழிலாளர்கள் பள்ளிக்குழந்தைகள் முதியவர்கள் என அனைத்து தரப்பினரின் தாகத்தை போக்கும் வகையில் ஆங்காங்கே நீர், மற்றும் மோர் பந்தல்களை திறந்து சேவை செய்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இரவு பகல் பாராது விடுமுறையில்லாது மழையிலும் வெயிலிலும் தொடர்ந்து பணியாற்றி மக்களின் பாதுகாப்பிற்காக அயராது உழைத்து வரும் காவல்துறையினர் சார்பிலும் தமிழ்நாடு முழுவதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் இச்சேவையினை செய்து வருகின்றனர்.
மேலும் அதன் தொடர்ச்சியாக கோயம்பேடு காவல் மாவட்டம் மதுரவாயல் காவல் நிலையம் முன்பு அக்காவல் நிலைய காவலர்களின் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைப்பெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற துணை ஆணையர் குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழச்சாறு, மோர், தர்பூசனிபழம் மற்றும் குளிர்பானங்களை வழங்கினார்.
வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்ட தாகத்தை போக்கும் வகையில் இக் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்தவர்களுக்கும் இக்குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் காவல் ஆய்வாளர் சிவஆனந்த், காவல் நிலைய எழுத்தர் பாபு உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.