அத்திப்பட்டு, மே. 06 –
மீஞ்சூர் பேரூராட்சி ஊழியர்கள் இருவர் தனியார் மெட்ரிக் பள்ளியில் உள்ள கழிவறை தொட்டியை சுத்தம் செய்த போது, விஷவாயு தாக்கி அவர்கள் இருவரும்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அச்சம்பவம் தொடர்பாக மத்திய மற்றும் மாநில தொழிலாளர் நல சட்டம் மற்றும் விதிகளின் கீழ் இரண்டு தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும், குறிப்பிட்ட காலத்திற்குள் பள்ளி நிர்வாகம் இழப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவிட்டு, வழங்கப்பட்ட நோட்டீசுக்கு உரிய இழப்பீடு வழங்காததால் அத்தனியார் பள்ளிக்கு பேரூராட்சி அதிகாரிகள் வருவாய்த்துறை முன்னிலையில் சீல் வைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியில் உள்ள இமானுவேல் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த மே 1ஆம் தேதியன்று மீஞ்சூர் பேரூராட்சி ஊழியர்கள் கோவிந்தன், சுப்புராயலு என்பவர்கள் பள்ளியின் கழிவறை தொட்டியை சுத்தம் செய்த போது விசவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், இச்சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளரும் நிர்வாகியுமான சைமன்டி விக்டர் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து, மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மத்திய, மாநில அரசின் தொழிலாளர் நல சட்ட விதிகளின் கீழ் உயிரிழந்த அவ்விரு தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் பள்ளி நிர்வாகம் தலா ரூ. 15 லட்சம் வீதம் இழப்பீட்டு தொகையினை வழங்கிடக் கோரிய நோட்டீஸ் விடப்பட்டிருந்தது.
ஆனால் அப்பள்ளி நிர்வாகம் எவ்வித இழப்பீட்டு தொகையையும் வழங்காததால், அத்தனியார் பள்ளிக்கு, மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றி அரசு, பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் முன்னிலையில் பள்ளிக்கு சீல் வைத்து சட்ட நடவடிக்கையை மேற்கொண்டார்.