மதுரவாயல், ஏப். 02 –
மதுரவாயல் கங்கை அம்மன் நகர் பகுதியில் நேற்று பலத்த வெடிச்சத்தம் கேட்டுள்ளது. மேலும் அச்சத்தம் நாட்டு வெடிகுண்டு வெடித்தது போல் இருந்ததால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளானர்கள்.
இந்நிலையில் அச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரவாயல் காவல்நிலையப் போலீசார் அச்சம்பவம் குறித்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவ்விசாரணையின் மூலம் மதுரவாயலை சேர்ந்த அசோக்குமார் (29), என்பவர் தீபாவளிக்கு வாங்கிய அனுகுண்டுகள் சிலவற்றை ஒன்றாக இணைத்து வைத்து அதனை பலத்த சத்தத்துடன் வெடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து மதுரவாயல் போலீசார் பொதுஇடத்தில் பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவித்த குற்றத்திற்காக அசோக்குமார்(29), அவரது நண்பர்கள் சுரேஷ்குமார்(38), இளங்கோவன்(21), விஜய்(23), ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
மேலும் இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் அவ்விசாரணையில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கதாகும். தீபாவளிக்கு வாங்கி வைத்த பட்டாசுகளை வெடித்தாரா அல்லது நாட்டு வெடிகுண்டை வெடிக்க வைத்தாரா என்ற கோணத்திலும் மேலும் வேறதெனும் சதி திட்டம் தீட்டவும் அந்த பகுதி மக்களை அச்சுறுத்த இதுபோன்ற செயலில் ஈடுபட்டாரா என்பது உள்ளட்ட பல்வேறு கோணத்திலும் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.