கும்பகோணம், மார்ச். 28 –
கும்பகோணம் வட்டம், சாரங்கபாணி பிள்ளையாம்பேட்டை, காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமையான உமாதேவி சமேத உமாமகேஸ்வரர் திருக்கோயிலின் மஹா கும்பாபிஷேக விழா 300 ஆண்டுகளுக்குப் பின் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
சுமார் 500 ஆண்டுகள் பழமையான இத்திருக்கோயிலில் உள்ள இறைவனை காவிரியாற்றில் புனித நீராடி வழிபட்டால் திருமணத்தடை, பாபவிமோசனம், நினைத்த காரியங்களில் வெற்றி, குழந்தை பாக்கியம், ஆகியவை கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை, இந்த இறைவனை காஞ்சி காமகோடி பீடாதிபதிகள், மராட்டிய மன்னர்கள், சைவ மடத்தின் மடாதிபதிகள் ஆகியோர் வணங்கி வழிபட்ட சிறப்புக்குரியது இத்தலமாகும்.
இத்திருக்கோயிலுக்கு கும்பாபிஷேக திருப்பணிகள் செய்து நிறைவு பெற்றதை தொடர்ந்து, கடந்த 26ம் தேதி சனிக்கிழமை, முதல் கால யாகபூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் ஆகியவற்றுடன் தொடங்கி, தொடர்ந்து 27ம் தேதி ஞாயிறு காலை மாலை என இரு வேளைகளும், இருகால யாக பூஜைகள் நடைபெற்றதையடுத்து இன்று காலை 4ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று, அதன் பூர்ணாஹ_திக்கு பிறகு மகா தீபாராதனையும் அதனையடுத்து, மங்கல வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடும் நடைபெற்றது.
பின்னர் ரிஷப லக்னத்தில், 300 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது, இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.