கும்பகோணம், மே. 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் மும்முனை மின்சாரத்தை முறையாக வழங்கக்கோரி விவசாயிகள் மின் மோட்டார் பைப்புகளை தலையில் சுமந்தபடி நூதன முறையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணத்தில் டெல்டா பகுதிகளான கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பந்தநல்லூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மும்முனை மின்சாரம் சரியாக வழங்கப் படவில்லை என அப்பகுதிவாழ் விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதனால் விவசாய பணிகள் முடங்கி விட்டதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
காவிரி ஆற்று நீரை நம்பி விவசாயம் மேற்கொண்டு வந்த டெல்டா விவசாயிகள், கடந்த சில வருடங்களாக போதுமான அளவு தண்ணீர் கிடைக்காததால் மின்சார மோட்டார்களை பயன்படுத்தி நிலத்தடி நீர் மூலம் விவசாய பணிகளை மேற்கொண்டு வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு அறிவித்த மும்முனை மின்சாரத்தை முறையாக வழங்காததால் டெல்டா பகுதிகளில் சாகுபடி செய்துள்ள பயிர்கள் அனைத்தும் கருகி வருவதாக புகார் தெரிவித்து கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தலையில் மின்மோட்டார் பைப்புகளுடன் வந்து நூதன முறையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அதுக் குறித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் விமலநாதன், தெரிவித்த போது
சட்டப்பேரவையில் அறிவித்ததை போன்று 16 மணி நேரம் உத்தரவாத மின்சாரம் வழங்கப்படாமல், 8 மற்றும் 10 மணி நேரமே மின்சாரம் வழங்கப்படுகிறது. அதுவும் மும்முனை மின்சாரம் இல்லாமல் இருமுனை மின்சாரம் மட்டுமே வழங்கப்படுகிறது.
அதனால் டெல்டா பகுதியில் சாகுபடி செய்துள்ள நெல், பருத்தி, கரும்பு, வாழை உள்ளிட்டவைகள் தண்ணீர் இன்றி கருகி வருகின்றன. எனவே தலைமைச் செயலாளர் உடனடியாக ஒரு ஆய்வுக் கூட்டத்தை நடத்தி தமிழக அரசு உத்திரவாதம் அளித்த 16 மணி நேர மின்சாரத்தை வழங்க வேண்டும். என்ற கோரிக்கையை வலியுறுத்தி கும்பகோணம் கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளோம்.
மேலும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இது குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் கும்பகோணத்தில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.





















