கும்பகோணம், மே. 24 –
கொப்பரை தேங்காய் கொள்முதலை ஒன்றிய அரசு, கிலோ ஒன்றுக்கு ரூபாய் 150 வீதம் மேற்கொள்ளவும், தமிழக அரசும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் தேங்காய்களை கொள்முதல் செய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி, கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் வாயிலில், சிதறு தேய்காய் உடைத்து விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஆண்டு தேங்காய் ஒன்றின் விலை ரூபாய் 22 ஆக இருந்தது, நடப்பாண்டில் இது ரூபாய் 7 மற்றும் 8 ஆக உள்ளது. இதனால் தென்னை விவசாயிகள் கடும் நஷ்டத்திற்கு ஆளாகி பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒன்றிய அரசும், கொப்பரை தேங்காயினை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 150 ஆக கொள்முதல் செய்திட வேண்டும் தற்போது கொள்முதல் செய்யப்படும் விலை ரூபாய் 103 ஆக உள்ளது. மேலும் தமிழக அரசும், வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் வாயிலாக தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில், தேங்காய்களை கொள்முதல் செய்ய முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலக வாயிலில், நூதனமுறையில், கைகளில் சிதறு தேங்காய் ஏந்தி கோரிக்கை முழங்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்த பிறகு, தேங்காய்களை உடைத்து தங்களது கோரிக்கைகளை ஒன்றிய அரசிற்கும், மாநில அரசிற்கும் முன்வைத்தனர். விவசாயிகளின் நூதன போராட்டத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பேட்டி : சுந்தரவிமல்நாதன், செயலாளர்,
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்






















