திருவாரூர், செப். 15 –
இன்று பேரறிஞர் அண்ணாவின் 114 பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் மற்றும் அரசு சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மேலும், அவரது புகழுக்கு சிறப்பளிக்கும் வகையில் இன்று திருவாரூரில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திராவிட இயக்கங்களை சேர்ந்த திமுக, மற்றும் அதிமுகவினர் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
மேலும், திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் கொரடாச்சேரி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று கொரடாச்சேரி பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து திருவாரூர் சட்டமன்ற அலுவலகம் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் அண்ணாவின் திருவுரு படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் இவ்விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
அதுப்போன்று திருவாரூர் நகர் பகுதியில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு திமுக நகர செயலாளர் பிரகாஷ் தலைமையில் மலர் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
மேலும் அதிமுகவினர் சார்பில் நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி தலைமையில் அண்ணாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதனைத்தொடர்ந்து நன்னிலம் அஇஅதிமுக சார்பாக பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பேனா பென்சில் சாக்லேட் மற்றும் ஆசிரியர்களுக்கு மரக்கன்றுகளை பேரூராட்சி உறுப்பினர் செல்சரவணன் வழங்கினார்.