திருக்கண்டலம், சனவரி. 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்தில் உள்ள திருக்கண்டலம் கிராமத்தில் இன்று இந்தியன் வங்கியின் சார்பில் பெரு நிறுவன சமூகப் பொறுப்பு திட்ட நிகழ்வு நடைபெற்றது.
அந்நிகழ்வில் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் சாந்தி லால் ஜெயின், கலந்து கொண்டு சமூக பங்களிப்பு நிதியின் கீழ் திருக்கண்டலம் கிராமத்தை உள்கட்ட அமைப்புகளை மேம்படுத்துவதற்கான நிதிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பள்ளி தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற 200 மாணவர்களுக்கு பரிசுகளும் நோட்டு புத்தகத்துடன் கூடிய பள்ளி (school bag) மற்றும் கிராம நூலகத்திற்கு ரூபாய் 20000 மதிப்பான புத்தகங்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து அவர் உரை நிகழ்த்தும் போது, இந்தியன் வங்கியானது இந்திய அளவில் ஏழாவது பெரிய வங்கியாக விளங்கி வருவதாகவும், மேலும் ரூபாய் 11. 64 லட்சம் கோடியில் வர்த்தகம் செயல்பட்டு வருவதாகவும், மேலும் வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரத்தில் வருகிற 2030 ஆம் ஆண்டில் ஏழு மில்லியன் டாலர் பொருளாதாரத்தை முன்னோக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, நம் பொருளாதாரம் இரண்டு மடங்கு வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது அதில் முக்கியமாக கிராமங்களில் மக்களின் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றம் அடைந்து வருகிறது அதற்கு இந்தியன் வங்கி உறுதுணையாக உள்ளது மகாத்மா காந்தி குறிப்பிட்டதை போல் நாட்டின் வளர்ச்சி கிராமங்களில் உள்ளடக்கியது என்பதை இந்தியன் வங்கி கருத்தில் கொண்டு, கிராமங்களில் முன்னேற்றம் அடைய செய்ய இந்தியன் வங்கி இந்த திருக்கண்டலம் கிராமத்தை தத்தெடுத்து அதற்கான உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது என்றார்.
மேலும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 20 லட்சம் வரை பிணை இல்லாத கடன்களையும் கடந்த காலங்களில் வழங்கியுள்ளதென்றார். அது மட்டுமல்லாது வீட்டுக் கடன் தொழில் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களையும் வங்கி வழங்கி வருவதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியின் நிறைவாக அரசு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி வெகுச்சிறப்பாக நடைபெற்றது,
அந்நிகழ்ச்சியில் இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குனர்கள் இம்ரான் ஆமீன் சித்திக், மகேஷ் குமார் பஜாஜ், அசுதோஷ் சவுத்ரி, பஜ்ரங் சிங் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருள்ராஜா உள்ளிட்டோர் பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர்.