காஞ்சிபுரம், மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக மகா கும்பாபிஷேக நிறைவு விழா நடைப்பெற்றது. தொடர்ந்து 1008 சங்குகளில் புனித நீர் வைத்து சிறப்பு பூஜை செய்து கச்சபேஸ்வரருக்கு அபிஷேகம் செய்தனர்.
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றானதும், திருமால் ஆமை வடிவில் வந்து ஈஸ்வரனை வணங்கி பேறு பெற்ற, திருத்தலமாகவும், தலை சம்பந்தப்பட்ட நோய்கள் தீர்க்கும் திருத்தலமாக விளங்குவதுமான காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு கடந்த 2005 ஆம் ஆண்டு அவ்விழாவிற்காக ரூ. 4 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் நடைபெற்று முடிவுற்ற நிலையில் கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. மகாகும்பாபிஷேக விழா நடைபெற்றதை முன்னிட்டு கடந்த 48 நாட்களாக மண்டல அபிஷேக பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றது.
48 வது நாள் மண்டல அபிஷேக பூஜையின் நிறைவு நாளான இன்று திருக்கோவில் யாக சாலையில் 1008 சங்குகளில் புனித நீர் வைத்து, சிவாச்சாரியார்கள், மந்திரங்கள் ஒலிக்க சிவவாத்தியங்கள் மேளதாளங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்து சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம் செய்யப்பட்டது.
சங்காபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர். சங்காபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானங்களும் வழங்கப்பட்டது.
சங்காபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் திருப்பணி குழுவின் தலைவர் எஸ். பெருமாள், செயலாளர் ஏ.சுப்பராயன், செங்குந்த மகாஜன சங்கத் தலைவர் எம் சிவகுரு, ஆகியோர் தலைமையிலான விழா குழுவினர் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.





















