கும்பகோணம், ஏப் . 04 –
கும்பகோணத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ரேவதி தலைமையில் நடைபெற்றது.
விழாவுக்கு சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சமுதாய வளைகாப்பு விழாவை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதில் மாநகராட்சி மேயர் சரவணன் துணை மேயர் சு ப தமிழழகன் நகர பொருளாளர் சோடா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் நகரம் மற்றும் ஊரக வட்டாரங்களிலுள்ள சுமார் 56 கர்ப்பிணி பெண்களுக்கு மங்கலப் பொருட்களான வளையல், மங்கலநாண், மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், ஆப்பிள், சாத்துக்குடி, மாதுளை மற்றும் காப்பரிசி, கடலைமிட்டாய், வேப்பம் காப்பு, பூமாலை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டது.
மேலும் மதிய உணவாக எலுமிச்சை சாதம், தயிர் சாதம், புளி சாதம், சாம்பார் சாதம், சர்க்கரை பொங்கல், புதினா துவையல், ஊறுகாய், சிப்ஸ், அரிசி வடகம் வழங்கப்பட்டன.