கும்பகோணம், மார்ச். 29 –
கும்பகோணத்தில் இன்று மாலை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு 190 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது,மாற்றுத்திறனாளிகளுக்குரிய கோரிக்கைகள் உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தையும் முறையாக, விரைவாக அனைவருக்கும் கிடைத்திட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், அந்த துறையை கலைஞரை போன்றே, மு க ஸ்டாலினும் தன்வசம் வைத்துள்ளார் என்றும், கல்வி உதவித்தொகை பெறுவதற்காண வருமானத்தை ரூபாய் 2 லட்சத்தில் இருந்து ரூபாய் 2.50 லட்சமாக உயர்த்தி அறிவித்துள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி …
இன்றைய தினம் காலையில் தஞ்சையில் 580 பயனாளிகள், பிற்பகல் கும்பகோணத்தில் 190 பயனாளிகள் என 770 பயனாளிகளுக்கு ரூபாய் 57 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கியதாகவும், பள்ளி மாணவர்களை கொண்டு கழிவறைகள் சுத்தம் செய்யும் காட்சி, செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வருவது தொடர்பாக வரும் 04ஆம் தேதி முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், ஆசிரியர் பணியிட மாறுதல் ஆன்லைன் வாயிலாக நடைபெறுவதால், இன்னும் ஒருவார காலத்திற்கு பிறகே உடற்கல்வி ஆசிரியர்கள் தேவைப்படும் இடங்கள் குறித்த முழுமையான தகவல் கிடைக்கபெறும், அதன் பிறகு காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப தேவையான இடங்களில் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் எனத்தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளார் கேட்ட மற்றொறு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் பள்ளிக்கூடங்களில் அபாய நிலையிலுள்ள பழமையான மரங்களின், மரக்கிளைகள் உடனடியாக பாதுகாப்பாக வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதுப்போன்று தனியார் பள்ளி, வாகன இயக்கத்தில் உரிய கவனம் செலுத்தி இருந்தால் நேற்றைய தினம் சென்னை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சம்பவத்தில் உயிர்பலி தவிர்க்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்த அமைச்சர்,
ஏற்கனவே கடந்த 2012ம் ஆண்டு போட்டப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் கொண்ட சுற்றறிக்கைகளை முறையாக அந்த பள்ளி நிர்வாகம் பின்பற்றி இருந்தாலே இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம் எனத்தெரிவித்தார்.
அதுப்போன்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, தன்னை கைது செய்ய முடியுமா என சவால் விடுத்துள்ளாரே அதுப்பற்றி உங்கள் கருத்தென்ன என வினா எழுப்பிய செய்தியாளரின் கேள்விக்கு
அமைச்சர் பதிலளிக்கையில் சிலர் தன் இருப்பிடத்தை காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக இத்தகைய கருத்துக்களை கூறுவார்கள் அதுப்போன்றுதான் இதுவும், என்றார் மேலும் தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதிகளையும் சட்டமன்றத்தில் தெரிவிக்கும் வாக்குறுதிகளையும் வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்கான கருத்துகளையும், வெளிப்படை தன்மையோடு தான் கூறுகிறார். அவை தொடர்ச்சியாக நிறைவேற்றப்பட்டும் வருகிறது .
மேலும் அண்ணாமலை கூறும் குற்றச்சாட்டுகளுக்கு அதுக்குறித்த விவாதம் மேடை அவர் அமைத்தால் முதல்வர் கூறும் நபர் அவருடன் விவாதிப்பார்கள். எந்த நேரத்தில் இது குறித்த விவாதத்திற்கு அவர் வந்தால், உரிய விளக்கமும், பதிலும் தர நாங்கள் தயாராகவே உள்ளோம் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலடி தந்தார்.
இந்நிகழ்வில், அரசு தலைமை கொறடா கோவி செழியன், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் இராமலிங்கம், கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன் கும்பகோணம் மாநகராட்சி மேயர் கே சரவணன், துணை மேயர் சு ப தமிழழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்து பல நிமிடங்கள் கழித்து முக்கிய விருந்தினர்கள் மற்றும் பயனாளிகள் பெரும்பாலானோர் கலைந்து சென்ற பின்னர் மிகவும் தாமதமாக நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. அப்போது பெரும்பாலானோர் அவர்கள் வீடு திரும்பும் அவசரத்தில் தங்களது பொருட்களை எடுத்தபடி இருந்தனர். பல இருக்கைகள் ஆட்கள் இன்றி காலியாகவே கிடந்தது.
அதுப்போன்றே அமைச்சர் பங்கேற்கும், நிகழ்ச்சிகள் மற்றும் அரசு விழாக்கள் பற்றிய தகவல்கள் கும்பகோணம் மாநகர செய்தியாளர்களுக்கு தெரியப் படுத்தப்படுவதில்லை என்றும் அதுப்போன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சி குறித்தும் கும்பகோணம் மாநகர் செய்தியாளர்களுக்கு முறையாக தகவல் எதையும் தஞ்சை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வழங்கவில்லை என்பதும் குறிப்பிடதக்கது. மாவட்ட நிர்வாகம் இதுக்குறித்து கவனம் செலுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க மாநகர செய்தியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.





















