புதுச்சேரி, ஏப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் …
புதுச்சேரியில் கல்லூரியில் பாடங்கள் படிக்க கடினமாக இருப்பதாக கூறி கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அவரது பெற்றோர்கள் ஆசிரியர்கள் கொடுத்த வீட்டு பாடத்தின் அழுத்தம் காரணமாகதான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கல்லூரியை முற்றுகையிட்டு வாக்கு வாத த்தில் ஈடுப்பட்டதால் மேலும் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி சொக்கநாதன் பேட்டை வடக்கு அணைக்கரை வீதியை சேர்ந்தவர் ரமேஷ் (51) கூட்டுறவு வங்கியில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். மேலும் அவருக்கு கிருஷ்ணசூரியா (18) மற்றும் 15 வயதில் ஒரு பெண் குழந்தை என 2 பெண் பிள்ளைகள் உள்ளனர்.
அதில் கிருஷ்ணசூரியா ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி (போப் ஜான் பால்) ஒன்றில் ஆங்கிலம் பி.ஏ.பி.எட் முதலாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஒன்றரை மாதங்களாக கல்லூரியில் படிப்பில் எழுதும் வேலைகள் அதிகமாக கொடுப்பதாகவும், தன்னால் ஆங்கில பாடங்களை சரிவர எழுத முடிவதில்லை என்றும், மேலும் கல்லூரியில் கொடுக்கும் பாடங்களை செய்து வராமல் சென்றால் கல்லூரி பேராசிரியர் தன்னை அவமானப் படுத்துவதாக கூறி அவரது பெற்றோர்களிடம் அழுதுள்ளார்.
மேலும் தன்னை வேறு ஏதாவது பாடப் பிரிவில் சேர்த்துவிடும்படி பெற்றோர்களிடம் கூறி வந்துள்ளார். இந் நிலையில் அவரது பெற்றோர்கள் அடுத்த ஆண்டு வேறோரு கல்லூரியில் சேர்த்து விடுவதாக அவருக்கு ஆறுதல் கூறி வந்துள்ளனர்.
இதற்கிடையில் நேற்று வீட்டின் முதல் தளத்தில் கிருஷ்ணசூரியா பாடங்களை எழுதிக் கொண்டிருந்துள்ளார். அவருக்கு அவரது தாய் தேவி ஜுஸ் போட்டு கொடுத்து விட்டு, சிறிது நேரத்தில் கீழே சாப்பிட இறங்குமாறு கூறியுள்ளார்.
நீண்ட நேரம் ஆகியும் அவர் வராததால் சந்தேகத்தில் மேலே சென்று பார்த்தபோது கிருஷ்ணசூரியா தான் பாடங்கள் எழுதிய தாள்களை கீழே போட்டு அதில் நாற்காலியை போட்டு ஏறி மின்விசிறியில் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாய் தேவி அலறி அடித்து தூக்கில் இருந்து தனது மகளை கீழ் இறக்கி அவரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கிருஷ்ணசூரிய ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் அதுக் குறித்து தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இன்று காலை கிருஷ்ணசூரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர் படித்த கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தனது மகளுக்கு அதிக பாட சுமை கொடுத்து மன உளைச்சலை ஏற்படுத்திய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர்.
அத்தகவலறிந்து சம்பப இடத்திற்கு விரைந்து வந்த ரெட்டியார்பாளையம் போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி தவறு நடந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி அவர்களை கலைந்துப் போக செய்தனர். அதனால் கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

























