சென்னை, ஜூன். 09 –
சுதந்திர தின விழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் (ம) தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் தமிழக முதலமைச்சரால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு ரொக்கப்பரிசு, தங்க பதக்கம், சான்று மற்றும் சால்வை வழங்கப்படும்.
இதனைத் தொடர்ந்து 2022-2023 ஆம் நிதியாண்டிற்கான சுதந்திர தின விழாவின் போது, சிறந்த சமூக சேவகர் (ம) சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளதால், இவ்விருதிற்கு விண்ணப்பம் செய்வது தொடர்பான விவரங்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த சமூக சேவகர் (ம) சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் பெற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டியவர்களின் தகுதிகள்:
- தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
- குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மகளிர் நலனுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற சமூக சேவை நிறுவனமாக இருத்தல் வேண்டும்.
இணையதளத்தில் விண்ணப்பித்தவர்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டியவை:
- விண்ணப்பதாரரின் கருத்து (Booklet-4) தமிழ்-2 மற்றும் ஆங்கிலத்தில்-2 புத்தக வடிவத்தில் தயாரிக்கப்பட்டு அளவு புகைப்படத்துடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
- ஒரு பக்கம் தனியரை பற்றிய விவரம் தமிழில் (மருதம் எழுத்துருவில்) மற்றும் ஆங்கிலத்தில் Soft Copy and Hard Copy
- இணைப்பு – படிவம் தமிழில் (மருதம் எழுத்துருவில்) மற்றும் ஆங்கிலத்தில் முழுமையாக பூர்த்தி செய்து Soft Copy and Hard Copy
எனவே, அனைத்து மாவட்டங்களிலும் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்கள், சம்மந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலர்களை நேரில் அணுகி வருகின்ற 30.06.2022 க்குள் கருத்துக்கள் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.