திருவாரூர், ஆக. 11 –
திருவாரூர் மாவட்டம், நன்னிலம், குடவாசல் மற்றும் வலங்கைமான் பகுதிகளில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் அப்பகுதி வாழ் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக தெரிவிக்கின்றனர்.
அதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இம்மின் வெட்டால் பெருத்த அவதிக்குள்ளாகி வருவதாகவும், மேலும் உடல் நலம் குன்றியவர்கள், பள்ளிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் வேலைக்கு செல்பவர்கள், என அனைத்து தரப்பினரும் சரியான தூக்கமில்லைமையால் அவர்களின் பணிகள் யாவும், குறிப்பிட்ட காலத்தில் செய்து முடிக்க முடியாமல் பல்வேறு துன்பத்திற்கு ஆளாகி வருவதாகவும், மேலும் சிறுதொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு தொழில் பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு வலங்கைமான் அருகேவுள்ள விருப்பாச்சிபுரம் பகுதியில், தொடர்ந்து ஏற்பட்ட மின் வெட்டின் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான அக்கிராம மக்கள் நள்ளிரவில் வலங்கைமான் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கும் போது நாளொன்றுக்கு ‘பத்து நிமிடங்கள் மட்டுமே மின்சாரம் இருப்பதாகவும், மேலும் உடனுக்குடன் மின்தடை ஏற்படுவதால் மின்சாதனப் பொருட்களும் பழுதடைந்து, பொருள் மற்றும் பணவிரயமும் ஏற்படுவதாக அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து, மின்வாரிய ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கிராம மக்கள், ஒருக்கட்டத்தில் பொறுமையிழந்து, திடீரென சாலையில் அமர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். நள்ளிரவில் நடைப்பெற்ற இப் போராட்டத்தினால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
பேட்டி: ராஜேந்திரன்,
விருப்பாச்சிபுரம்