கும்பகோணம், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில், மாசிமகப் பெருவிழா ஆண்டு தோறும் சைவ மற்றும் வைணவ தலங்கள் இணைந்து பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம், மேலும் இவ்விழா தொடர்புடைய பனிரெண்டு சிவாலயங்களில் ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், காளஹஸ்தீவரர், வியாழசோமேஸ்வரர், அபிமுகேஸ்வரர் மற்றும் கௌதமேஸ்வரர் ஆகிய ஆறு சிவாலயங்களில் கடந்த மாதம் 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது
மேலும் ஏனைய ஆறு சைவ தலங்களில் ஏகதின உற்சவமாக இவ்விழா இன்று நடைபெறுகிறது அதுபோலவே, விழா தொடர்புடைய ஐந்து வைணவ தலங்களில், சக்ரபாணிசுவாமி, ஆதிவராகபெருமாள் மற்றும் இராஜகோபாலசுவாமி ஆகிய மூன்று திருக்கோயில்களில் 16ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது ஏனைய 2 தலங்களில் ஏகதின உற்சவமாக இவ்விழா இன்று நடைபெறுகிறது.
கொடியேற்றத்தை தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் திருவீதியுலா நடைபெற்றது விழாவின் 9ம் நாளான நேற்று மாலை மகாமக குளத்தின் தென்மேற்கில் உள்ள கௌதமேஸ்வரர் திருக்கோயிலில் சௌந்தரநாயகி சமேத கௌதமேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று மாலை உற்சவர் சுவாமி மற்றும் அம்பாள் தேரில் எழுந்தருள, தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. அந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தும், தேரில் உலா வந்த சுவாமிகளை தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர்.