தஞ்சாவூர், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தஞ்சாவூர் மாவட்ட்டம், பாக் நீரிணைப்பு பகுதியில் காணப்படும் அபூர்வ வகை உயிரினமான அவுரியா எனப்படும் கடல் பசுவை பாதுகாக்கும் வகையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வனக் கோட்டத்திற்கு உட்பட்ட மனோராவில் கடற் பசு பாதுகாப்பு மையத்தை தமிழ்நாடு அரசு வனத்துறை அமைத்துள்ளது.
இந்நிலையில் அக் கடற் பசுவை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட வனத்துறை அலுவலர் அகில் தம்பி உத்தரவின் பேரில் பட்டுக்கோட்டை அருகே உள்ள மனோரா கடற்கரையில் மீனவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்நிகழ்சியில் கலை நிகழ்ச்சிகள் மூலம் கடல் பசுவை பாதுகாப்பதன் அவசியம் குறித்து மீனவர்களுக்கு விளக்கப்பட்டது. மேலும் மீனவர்களிடம் கடல் பசு குறித்து கேள்வி எழுப்பி சரியான பதிலளித்தவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. அந் நிகழ்வினைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் உறுதிமொழியை வாசிக்க கடற்பசுவை பாதுகாப்போம் என மீனவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
அதன் பின்னர், அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டம் பகுதியிலும் இது போல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் வனத்துறையினர், கடலோர பாதுகாப்பு குழுமம், ஓம்கார் பவுண்டேஷன் இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்கள்.