நாச்சியார்கோவில், மே. 21 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, நாச்சியார் கோவிலுக்குட்பட்ட வீரராகவபுரத்தில் உள்ள புனித ஜெபமாலை மாதா திருத்தலம் அமைந்துள்ளது.
மேலும் ஆண்டுதோறும் இத்திருத்தலத்தின் தேர்பவனி வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக இவ்விழா கொரோனா தொற்று பரவல் உட்பட பல்வேறு காரணங்களினால் இவ்விழா நடைபெறவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இவ்வாண்டு அவ்விழாவினை வெகு சிறப்பாக கொண்டாடுவதற்காக கடந்த 15 ஆம் தேதி திங்கட்க்கிழமை மாலை 6 மணிக்கு, மறை மாவட்ட முதன்மை குரு குழந்தைநாதன் தலைமையில் திருக்கொடி ஏற்றி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அருட்தந்தையர்களால் செபமாலை, நவநாள் செபம், கூட்டு திருப்பலி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
முன்னதாக காலை திருப்பலி மற்றும் மறையுரை அருள் செபஸ்தியான் மற்றும் மாலை ஜெபமாலை நவநாள் திருப்பலி மற்றும் மறையுரை பங்கு தந்தைகள் நடத்தினர். தொடர்ந்து, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 5 தேரில் புனித அந்தோனியார், ஜெபமாலை மாதா, சம்மனசு, சூசையப்பர், ஆடம்பர தேரில் எழுந்தருள தேர்பவனி வாணவேடிக்கையுடன் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.
தேர் பவனியின் போது, பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை அலங்கரிக்கப்பட்ட தேரின் மீது தூவி மெழுகுவர்த்தி ஏற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இந்நிகழ்வில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று இவ்விழாவினை சிறப்பித்தனர்.
























