திருவாரூர், செப். 25 –
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள ஆவூர் பகுதியில் சுமார் 25 லட்சம் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்காவை நன்னிலம் காவல்நிலைய போலீசார் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகாவுக்கு உட்பட்ட ஆவூர் பகுதியில் ஜமாலுதீன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். மேலும் அவருக்கு ஆவூர் பகுதியில் உள்ள ரஹ்மானியா நகரில் குடோன் ஒன்று உள்ளது. அக் குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, மற்றும் குட்கா போன்ற போதை விளைவிக்க கூடிய பொருட்களை பதுக்கி வைத்து இம்மாவட்டம் முழுவதும் மொத்த விற்பனையில் ஈடுப்பட்டு வந்துள்ளார். இதுக் குறித்து காவல்துறைக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
உறுதி செய்யப்பட்ட அத்தகவலின் அடிப்படையில் நன்னிலம் டிஎஸ்பி இலக்கியா தலைமையில் வலங்கைமான் காவல்நிலைய போலீசார்கள் கொண்ட தனிப்படை அங்கு விரைந்து சென்று அக்குடோனை சோதனையிட்டதில் அங்கு பதுக்கி வைத்து விற்பனைக்காக வைத்திருந்த 65 பெட்டிகள் கொண்ட குட்கா மற்றும் 98 சாக்கு பைகள் கொண்ட குட்கா பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்தார்கள். இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ. 25 இலட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும், காவல்துறை வருவதை அறிந்த ஜமாலுதீன் போலீசாரின் பிடியில் சிக்காமல் இருப்பதற்காக அங்கிருந்து தப்பி தலைமறைவாகி விட்டார். அதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து வலங்கைமான் காவல்துறை தனிப்படை போலீசார் அவரை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரது குடோனை பூட்டி சீல் வைத்தனர்.