மதுக்கூர், ஜூலை. 16 –
மதுக்கூர் வட்டாரத்திற்கு உட்பட்ட ஆலத்தூர் வேளாண் உதவி அலுவலர் தொகுதியில் உழவன் செயலியின் மூலம் ஆவணங்கள் பதிவு செய்த குருவை விவசாயிகளின் விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு 100% மானியத்தில் ரூபாய் 2466 க்கு ஒரு மூட்டை யூரியா ஒரு மூட்டை டி ஏ பி 25 கிலோ பொட்டாஸ் உரம் வழங்கும் நிகழ்ச்சி ஆலத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் திலகவதி கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட குருவை சாகுபடி விவசாயிகளுக்கு உரங்களை வழங்கினார். இந்நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த கூட்டுறவு வங்கி தணிக்கை அலுவலர் பாண்டியன் ஆலம் பள்ளம் விவசாயிக்கு உரம் வழங்கும் ஆணையை வழங்கினார்.
தொடர்ந்து, ஆலத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் பாலசுப்ரமணியன் விவசாயிக்கு உரத்தை வழங்கினார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலர்கள் இளஞ்சியம் மற்றும் ஆத்மா திட்ட அலுவலர் ராஜூ ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும், ஆலத்தூர் பஞ்சாயத்து மற்றும் புலவஞ்சி மற்றும் ஆலம்பள்ளம் தனிக்கோட்டை பஞ்சாயத்தை சேர்ந்த விவசாயிகள் குருவை சாகுபடி செய்து மேலுரம் இடும் நிலையில் உள்ள பயிர்களுக்கு, விவசாயிகள் விடுபாடின்றி உழவன் செயலியில் பதிவு செய்து உரம் பெற்று பயன்பெற வேண்டுமாறு, வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் வேளாண் உதவி அலுவலர் சுரேஷ் செய்திருந்தார்