சென்னை, டிச. 22 –
மாத வாடகை தருவதாக கூறி காரை அடமானம் வைத்து மோசடியில் ஈடுப்பட்டவரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
சென்னை திருவான்மியூரில் வசித்து வருபவர் கணேஷ்குமார் (35). இவர் அனகாப்புத்தூரை சேர்ந்த கருப்பசாமி (37) என்பவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது சொந்த பயன்பாட்டில் உள்ள காரினை மாத வாடகைக்காக கொடுத்துள்ளார். கணேஷ்குமாருக்கு மாத வாடகையாக ஐம்பதாயிரம் ரூபாய் அளிப்பதாக கருப்பசாமி உறுதியளித்துள்ளார்.
ஆனால் கருப்பசாமி சொன்னது போல் வாடகை எதுவும் கொடுக்கவில்லை. ஆறு மாதங்களாக ஏமாற்றி வந்த கருப்பசாமி மீது, திருவான்மியூர் காவல் நிலையத்தில் கணேஷ்குமார் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணையை துவக்கிய போலீசார் கருப்பசாமியை சென்னை அண்ணா நகரில் மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கணேஷ்குமாரின் காரை தனது சொந்த ஊரான மதுரையில் ஒருவரிடம் அடமானம் வைத்திருப்பதாக கூறியுள்ளார்.
மதுரை விரைந்த தனிப்படை போலீசார் அங்கு ஒரு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கணேஷ்குமாரின் காரினை மீட்டு வந்தனர். ஏமாற்று பேர் வழியான கருப்பசாமி மீது ஏற்கனவே பல காவல் நிலையங்களில் இது போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது, போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கருப்பசாமி மீது வழக்கு பதிந்த திருவான்மியூர் போலீசார் கருப்பசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.