கும்பகோணம், மே.09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேவுள்ள கடிச்சம்பாடி ஊராட்சி கட்டிடத்தில் எழுதப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சி மன்ற தலைவரின் பெயர் பெயிண்டல் அளிக்கப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அதுதொடர்பாக அவர் சுவாமிமலை காவல் நிலையத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மீதும் புகார் அளித்துள்ளார்.
கடிச்சம்பாடி ஊராட்சி மன்ற தலைவராக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மலர்கொடி சீனிவாசன் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் கடந்தாண்டு கட்ச்சம்பாடி ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடத்தில் தன்னுடைய பெயரை எழுதியுள்ளார். அந்த கட்டிடத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திறந்து வைத்துள்ளார்.
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் கட்டுப்பாடுகள் விதிமுறைக்கு வந்ததால், தலைவரான அவரது பெயர் வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக, பிளக்ஸ் வைத்து மறைக்கப்பட்டது. வாக்குப் பதிவு முடிந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், ஊராட்சி மன்றத் தலைவர் மலர்கொடி சீனிவாசன், அவரது பெயரை மறைத்துள்ள பிளக்ஸை அகற்றிய போது, அவரது பெயர் பெயிண்டால் அழிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அதுத் தொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவர் மலர்கொடி சீனிவாசன், சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் அவ்விவகாரம் குறித்து அவர் தெரிவிக்கையில் …
கடிச்சம்பாடியில் 50 ஆண்டுகளுக்கு பிறகு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த நான் ஊராட்சி மன்றத் தலைவராகியுள்ளேன். ஆனால் இங்குள்ள ஊராட்சி மன்ற துணைத் தலைவரும், முன்னாள் ஊராட்சி தலைவரும் வாட்ஸ்அப், பேஸ்புக்குகளில் எந்த அளவிற்கு என்னை அசிங்கப்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு அசிங்கப்படுத்துகிறார்கள்.
மேலும் சமுதாய ரீதியாகத் என்னை செயல்பட விடாமல் தடுக்கின்றனர். கடிச்சம்பாடி ஊராட்சியில் இவர்களை மீறி மக்கள் பணிகளை செய்து கொண்டிருக்கிறேன். தேர்தலுக்காக மூடி வைக்கப்பட்டிருந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பெயர் பலகையை திறந்தபோது அதில் என்னுடைய பெயர் அழிக்கப்பட்டுள்ளது.
ஊரில் எனக்கு எதிரிகள் யாரும் கிடையாது. கண்டிப்பாக இந்த செயலை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், தற்போது உள்ள ஊராட்சி மன்ற துணைத் தலைவரான சிவபாலன்தான் செய்துள்ளனர்.
அதுக் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். எனக்கு ஏற்பட்ட அசிங்கம் என்னுடைய தலைமுறையினர் யார் வந்தாலும் அவர்களுக்கு இது போன்ற இடர்பாடுகள் இருக்கக் கூடாது. எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என்று தெரிவித்தார்.






















