திருவள்ளூர், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
ஜூஸ் குடிப்பதற்கு டம்ளர் கேட்ட நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் பளார் என அரைக் கொடுத்த ஜூஸ் கடை உரிமையாளர் செய்த அச்செயல் அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி தற்போது அக்காட்சியின் சிசிடிவி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அதுக் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை சி.வி நாயுடு சாலையில் அமைந்துள்ள நெல்லை ஸ்வீட்ஸ் கடையில் திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வரும் இளையா என்பவர் கடையில் இரண்டு ஜூஸ் பார்சல் வாங்கிக் கொண்டு ஜூஸ் குடிப்பதற்காக உரிமையாளரிடம் கப் கேட்டுள்ளார்.
அவர் ஒரு கப்பிற்கு ஐந்து ரூபாய் கொடுக்க வேண்டும் என கூறியதாகவும், நீதிமன்ற அலுவலக உதவியாளர் இளையா கடை உரிமையாளரிடம் பாலித்தீன் கவரில் நீங்கள் ஜூஸ் கொடுக்கிறீர்கள் அதனால் நீங்கள்தான் கப் கொடுக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து கடை உரிமையாளர் மற்றும் நீதிமன்ற அலுவலக உதவியாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பேசிக் கொண்டிருந்த போதே கடை உரிமையாளர் திடீரென நீதிமன்ற அலுவலக உதவியாளர் இளையாவை சரமாரியாக கன்னத்தில் தாக்கியுள்ளார்.
அதனால் அருகில் இருந்தவர்கள் மடக்கி வெளியே அனுப்பிய நிலையில் அருகே இருந்த மற்றொரு ஸ்வீட் ஸ்டாலின் ஜூஸ் வாங்க சென்ற நீதிமன்ற அலுவலக உதவியாளரை ஜூஸ் கடையில் பணிபுரியும் மற்றும் ஒரு மூன்று நபர்கள் சேர்ந்து சரமாரியாக தாக்கி உள்ளனர்.
அதையடுத்து இளையா திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்துள்ள நிலையில் திருவள்ளூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தலை மறைவானவர்களை தேடி வருகின்றனர். நெல்லை ஸ்வீட் கடையில் ஜூஸ் வாங்க சென்ற திருவள்ளூர் நீதிமன்ற அலுவலக உதவியாளரை கடை உரிமையாளர் தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.























