திருவள்ளூர், ஏப். 30 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் நேற்று ஆக்சிஜன் சிலிண்டருடன் சுவாசித்துக் கொண்டே திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மனு கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவள்ளூரை அடுத்த ஆரணி புதிய தமிழ் காலனியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் இவர் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள சிலிக்கான் பவுடர் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த நிலையில் பல மாதங்களாக பிரவீன்குமாருக்கு சுவாச கோளாறு ஏற்பட்டு மிகுந்த அவதிக்குள்ளாகி வுள்ளார். மேலும் இந்நிலையில் அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நுரையீரல் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
மேலும் தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் அங்கு அவருக்கு போதிய அளவிலான சிகிச்சை அளிக்கப் படவில்லை எனவும், மேலும் அங்கிருந்து சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் பிரவீன் குமாரை முழுமையாக சிகிச்சை அளித்து குணப்படுத்த வேண்டும் என்றால் ரூ. 45 லட்சம் செலவு ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த தனியார் தொழிற்சாலை நிர்வாகத்திடம் சென்று மருத்துவ உதவிக்காக பணம் கேட்டபோது அவர்கள் பணம் தர மறுத்து விட்டதாக அவர் குறிப்பிடுகிறார்.
இந்நிலையில் தன் உயிரைக் காப்பாற்ற வழி தெரியாமல் பிரவீன் குமார், தனது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் ஆக்சிஜன் சிலிண்டரை சுமந்தபடி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்துள்ளார். ஆக்சிஜன் சிலிண்டர் உடன் வந்த அவரைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில் அவரிடமிருந்து மனுவினை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் தனியார் தொழிற்சாலை நிர்வாகத்திடம் நாங்கள் பேசுகிறோம் என்று உறுதி அளித்துள்ளனர். அந்நிகழ்வினால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.





















