மயிலாடுதுறை, ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
சிலம்பம் கச்சை கட்டும் எனும் விழாவில் குத்துவரிசை, புலி வரிசை, அடிமுறை சிலம்பம், சுருள்வீச்சு உள்ளிட்ட பல்வேறு பண்டைய தமிழர் வீர கலையை செய்து காட்டி மயிலாடுதுறை பகுதிப் பார்வையாளர்களை வெகுவாக அசத்திய சின்னஞ்சிறு மாணவ மாணவியர்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் மகாகவி சிலம்பம் அகாடமி சார்பில் ஐந்தாம் ஆண்டு சிலம்பம் கச்சை கட்டு விழா இன்று நடைபெற்றது. கராத்தேயில் பெல்ட் வரிசை போன்று சிலம்பத்தில் குறிப்பிட்ட பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெள்ளை மஞ்சள் ஆரஞ்சு கருப்பு ஆகிய தகுதி பட்டைகள் 12 வகைகளாக கச்சைகள் என்ற பெயரில் அணிவிக்கப்படுகின்றன இதற்கான நிகழ்ச்சி இன்று மயிலாடுதுறையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற மாணவ மாணவியர் சிறுவர் சிறுமியர் சிலம்பக்கலையில் அடிப்படையான குரங்குப் பாய்ச்சல், குத்துவரிசை, புலிவரிசை, அடிமுறை சிலம்பம், போர் சிலம்பம், அலங்கார சிலம்பம், மான்கொம்பு, சுருள், வாள் வீச்சு, வாள் கேடயம் போன்ற தமிழரின் பாரம்பரிய கலைகளை மிகுந்த விறுவிறுப்பாக நடத்திக் காட்டியது பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது. 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கட்சிகள் வழங்கப்பட்டது. சிலம்ப மாஸ்டர்கள் சசிகுமார் என் எஸ் ராஜமாணிக்கம் வி சுந்தரராமன் திவ்யதர்ஷினி, வார்டு கவுன்சிலர் ஆனந்தகுமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.























