பெரியபாளையம், பிப். 26 –
திருவள்ளூர் மாவட்டம் , பெரியபாளையம் வட்டாரப் பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள், டெல்லியில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசுக்கு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அப்போராட்டத்தை தடுக்க நினைக்கும் ஆளும் அரசு அப் போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் மீது காவல்துறையை ஏவி நடத்திய துப்பாக்கி சூட்டில் இளம் விவசாயி ஒருவர் பலியாகி உள்ளார்
மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் படுகாயம் அடைந்துள்ளனர். அச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருவள்ளுர் மாவட்டம் பெரியபாளையம் சரக விவசாயிகள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயின் திருஉருவ படத்திற்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தியை ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு உள்ளிட்ட தாக்குதலை நடத்தி வரும் மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்தும், விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.