திருவள்ளூர், பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அருகேவுள்ள தனியார் கார் தொழிற்சாலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் தனங்களுக்கு பணி வழங்கக் கோரி அத் தொழிற்சாலை முன்பு அவர்கள் தங்கள் குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அப்போராட்டத்தில் சிறுவர்கள், மற்றும் பெண்கள் உட்பட 80 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அவர்களை காவல்துறையினர் தரதரவென இழுத்து சென்று குண்டுகட்டாக கைது செய்தனர். அச்சம்பவம் அப்பகுதியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அதிகத்தூர் பகுதியில் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த தனியார் கார் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அத்தொழிற்சாலையில் இருந்து 178 தொழிலாளர்களை அந்நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளனர்.
அதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுவரை 17 முறை பேச்சு வார்த்தை நடத்தியும் தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தினர் யாரையும் பணியில் அமர்த்த எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளப்படவில்லை எனத் தெரிய வருகிறது.
இந்நிலையில் தொழிலாளர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகம் உரிய முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவில்லை எனக்கூறி பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எஸ்.கண்ணன் தலைமையில் அதிமுக திருவள்ளூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ரமணா, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், பா.ம.கவினர் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கு ஆதரவாக தொழிற்சாலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மேலும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் அதிமுக அமைச்சர் பி வி ரமணா உட்பட அதிமுக நிர்வாகிகள் மற்றும் பாமக மாநில நிர்வாகி உட்பட பல்வேறு கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் சிறுவர்கள், பெண்கள் உட்பட 80 பேரை போலீசார் தரதரவென இழுத்து குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் அனைவரையும் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். அந்நிகழ்வின் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.





















