திருவள்ளூர், பிப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
108 திவ்ய தேசங்களில் ஒன்றானது சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகரில் அமைந்துள்ளது வைத்திய வீரராகவர் பெருமாள் திருக்கோயிலாகும். மேலும் அத்திருக்கோயிலில் சாலிஹோத்ர மகரிஷிக்கு தை அமாவாசை மற்றும் சிரவண நட்சத்திரம் இணைந்து வந்த நாளில் ‘ஹ்ருத்தாப நாசினி குளத்தின் அருகே வீரராகவப் பெருமாள் காட்சியளித்ததாக அத்தல வரலாறு தெரிவிக்கிறது.
அதனால் அச்சிறப்பு மிக்க நாளான தை அமாவாசை அத்திருக்கோயிலில் மிக விமர்சையாக காலம் காலமாக கொண்டாடப் பட்டு வருவதாக அப்பகுதி பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
அதுப் போன்று நடப்பாண்டும் தை அமாவாசை நாளான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், திருவள்ளூர் வீரராகவர் கோவிலுக்கு அருகில் உள்ள ஹிருதாபநாசினி குளத்தில் புனித நீராடி, வீரராகவரை வழிபட்டால், பலவிதமான நோய்கள் மற்றும் பித்ரு தோஷம் நீங்கும் என்றவாறு பக்தர் அத்திருக்குளத்தில் நம்பிக்கையுடன் நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் இந்நாளில் உள்ளூர் மட்டுமல்லாது சுற்று வட்டாரம், தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்கள், மற்றும் வெளிமாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் நேற்று மாலை முதலே திருவள்ளூர் வந்தனர்.
அதனைத்தொடர்ந்து அவர்கள் இன்று அதிகாலையிலேயே குளத்தின் அருகே மற்றும் காக்களூர் பாதாள விநாயகர் கோயில் அருகே உள்ள ஏரியில் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
பின்னர் அத்திருக்கோவிலில் உள்ள கண்ணாடி மண்டபத்தில் முத்தங்கி சேவையில் எழுந்தருளிய உற்சவர் வீரராகவப்பெருமாள், மூலவர் வீரகவா பெருமாள் உள்ளிட்டவர்களை 3 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். இந்நிலையில் பக்தர்களின் வருகை திடீரென அதிகரித்ததால், திருவள்ளூர் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.





















