சென்னை, ஜூன். 25 –
சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்று வரும் புனரமைப்பு பணிகளை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இம் மைதானத்தில் எதிர் வரும் ஆகஸ்ட் 03 முதல் 13 வரை ஹீரோ ஆசியன் சாம்பியன்ஸ் கோப்பை – 2023 போட்டிகள் நடைப்பெறவுள்ளதென்பது குறிப்பிடத் தக்கதாகும்.
மேலும் இப்போட்டியில், இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான் மற்றும் கொரியா ஆகிய ஆறு நாடுகள் பங்கேற்கின்றது. இச்சர்வதேச அளவில் நடைப்பெறும் இப்போட்டியினை சிறப்பாக நடத்துகின்ற வகையில் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்புனரமைப்பு மற்றும் கட்டுமானப்பணிகளை சிறந்த முறையில் மேற்கொள்ள திட்டமிடுவதற்கென ஹாக்கி இந்தியா உயர் மட்ட அலுவலர்கள் குழு கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி இதனை ஆய்வு மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து, மேற் கொள்ளப்பட வேண்டிய பணிகள் திட்டமிடப்பட்டு மைதானத்தை புனரமைத்து, மேம்படுத்தும் பணிகள் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் தொடங்கி நடைப்பெற்று வருகிறது.
முதன்மை ஹாக்கி செயற்கை ஆடுதளம், வீர ர்கள் பயிற்சி செய்வதற்கான செயற்கை ஆடு தளம் மற்றும் இணைப்பு பணிகள், பார்வையாளர்களுக்கான இருக்கை வசதிகள், சிறப்பு விருந்தினர்கள் அமருவதற்கான பார்வையாளர் கூடம், விளையாட்டு வீர ர்களுக்கான அறைகள், மின்ணொளி வசதிகள், நவீன கழிப்பிட வசதிகள் மற்றும் பிற சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு உயர் மட்ட அலுவலர்களுடன் சென்று ஆய்வு மேற் கொண்டார். இவ்வாய்வின் போது, அமைச்சருடன் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச்செயலர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாதரெட்டி ஆகியோர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.