கும்கோணம், ஏப். 08 –
கும்பகோணம் அருகேவுள்ள ஆடுதுறையில் அமைந்துள்ள மிகவும் பிரசித்திப்பெற்ற திருக்கோயிலான அருள்மிகு ஸ்ரீமதுரகாளியம்மன் 94 ஆம் ஆண்டு திருநடனத் திருவிழா வெகுச் சிறப்பாக கடந்த புதன் கிழமையன்று இப்பகுதியில் நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் திரளான அவ்வூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
மேலும் அதனைத்தொடர்ந்து மதுரகாளியம்மன் திருநடனம் ஆடிக்கொண்டே அவ்வூர் வீதிகள் தோறும் வலம் வந்தார். மேலும் அக்காளியம்மனுக்கு அவ்வூர் மக்கள் படையலிட்டு, தீபாராதனை செய்து அம்மனை வழிபட்டனர்.
கும்பகோணம் அருகே ஆடுதுறை கஞ்சான் மேட்டுத்தெருவில் அமைந்துள்ள மதுர காளியம்மன் இப்பகுதியில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக போற்றி வணங்கப்படுகிறது, இத்தலத்தின் 94 வது ஆண்டு திருநடன திருவிழா கடந்த 27ம் தேதி திங்கட்கிழமை காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது, விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, காளியம்மன் திருநடனம் கடந்த 04 ஆம் தேதி செவ்வாய்கிழமை முதல் ஏப்ரல் 08 ஆம் தேதி சனிக்கிழமையான இன்று வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு நடைபெற்று வருகிறது.
மேலும் அதனை முன்னிட்டு, மதுரகாளியம்மன் திருநடனத்துடன் வீதிகளில் பவனி வரும் அப்போது, ஒவ்வொரு குடும்பத்தினரும், மாவிளக்கு ஏற்றிவைத்து, தட்டில் பழங்கள், தேங்காய் மலர்சரங்கள், எலுமிச்சம் பழம், மங்கல பொருட்களான வளையல் தாலி கயிறு, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றுடன் மதுர காளியம்மனை தண்ணீர் நிரப்பிய சொம்பில் வேப்பிலை சொருகி வைத்து, அதன் பாதங்களை குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்வித்தும், தங்கள் வீடுகளுக்கு வரவேற்றனர் அப்போது பூசாரி தீபாராதனை செய்ய, மதுரகாளி தனது திருக்கரங்களால், பக்தர்களுக்கு திருநீற்று பிரசாதங்களை வழங்கி அவர்களுக்கு அருள் பாலித்தார்.
தொடர்ந்து எதிர் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அம்பாள் ஊஞ்சல் திருவிழாவும், அதனையடுத்து, 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வீரசோழ ஆற்றங்கரையில் 1008 பால்குட ஊர்வலம், அலகு காவடிகளுடன் வந்து, மதுரகாளியம்மனுக்கு மகா அபிஷேகமும் நடைபெற்ற பிறகு தயிர் பள்ளயம் இடப்பட்டு பக்தர்களுக்கு அன்னபிரசாதங்கள் விநியோகம் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிய வருகிறது.























